பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் சம்பந்தமாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளபோதும் அது தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு துஷ்பிரயோகங்கள் தொடர்வதாக சுட்டிக்காட்டி ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிரிவின் தலைவர் சாள்லஸ் வைட்லிக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி கடிதம் அனுப்பியுள்ளது.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் ஊடாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனினால் ‘பயங்கரவாதத் தடைச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் தொடர்ச்சியான துஷ்பிரயோகம்’ எனும் தலைப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த சில வருடங்களாக பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் எனப் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட போதிலும், இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மக்களைத் தொடர்ந்து கைது செய்து தடுப்புக் காவலில் வைத்து வருகின்றமை குறித்து உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கே இக்கடிதம் எழுதப்படுகிறது.
அத்துடன் இச்சட்டம் நீக்கப்படும் வரை அதனைப் பயன்படுத்துவதில்லை என்ற இடைக்காலத் தடைக்கான உறுதியையும் அரசாங்கம் வழங்கியிருந்தது.
இந்தச் சட்டத்தினால் ஏதோ ஒரு வகையில் தடைசெய்யப்பட்ட ஒரு பாடலைப் பாடினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், 24 வயதுடைய சொல்லிசைப் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சன் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த காலங்களில் நீங்கள் பலமுறை செய்தது போல, இந்த விவகாரத்தை இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லுமாறும், அவர்கள் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றி, இந்த கொடூரமான சட்டத்தை தாமதமின்றி நீக்குமாறு அவர்களிடம் வலியுறுத்துமாறும் நாங்கள் உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்விடயம் தொடர்பாக உங்களது தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



