Home Blog Page 1473

ஏற்கனவே பரவியுள்ள வைரஸ் திரிபடைவதை தடுக்கமுடியாது – மருத்துவத் துறை எச்சரிக்கை

நாட்டுக்குள் திரிபடைந்த வைரஸ் நுழைவதை தடுப்பதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், நாட்டுக்குள் ஏற்கனவே பரவியுள்ள வைரஸ்கள் திரிபடைவதை நம்மால் தடுக்க முடியாது.

இப்படித் தெரிவித்திருக்கிறார் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலர் மருத்துவர் ஹரித அலுத்கே. ஊடகங்களுக்கு நேற்று கருத்துத் தெரிவித்த அவர்,

“எந்தவொரு நாட்டிலும் உள்ள வைரஸும் மாற்றம் அடையலாம். இந்தத் திரிபுக்கு வரம்புகள் எதுவும் இல்லை. இது எங்கும் புதிதாக திரிபடையக்கூடும். எனவே, மற்ற நாடுகளில் உருவானமை போன்று நம் நாட்டிலும் வைரஸ்கள் திரிபடைய வாய்ப்ப உண்டு.

உலகில் 20இற்கும் மேற்பட்ட திரிபடைந்த வைரஸ்கள் பரவி வருகின்றன. எந்தவொரு வைரஸும் திரிபடையலாம். நாம் அதைப் பொருட்படுத்தாமல் அடிப்படை சுகாதாரப் பழக்கங்களை பின்பற்ற வேண்டும்” என்றும் அவர் சொன்னார்.

ஜி.எஸ்.பி. வரிச்சலுகை பறிபோகும் அபாயம் – ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை

வெளிநாட்டுக் கொள்கைகளிலும் நாடு இதே போன்று முறையற்ற விதத்தில் செல்லுமாயின் எதிர்காலத்தில் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் எதிர்க கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

2021 சுபீட்சமான ஆண் டாக அமையும் என்று ஜனாதிபதி கூறுகின்றார். ஆனால், மக்களுக்கு 3 வேளை உண்பதற்குக் கூட உணவு கிடைக்குமா என்பது சந்தேகமாகும். கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் உலக நாடுகள் அவற்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளன.

ஆனால், இலங்கையில் கொரோனா பாணியை வைத்து மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றனர். வியத்மக அமைப்பிலுள்ள பலருக்கும் அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமைக்குள் நாட்டை சுபீட்சமுடையதாக்க முடியுமா ? முதலீட்டாளர்கள் எவ்வாறு நாட்டில் நம்பிக்கை வைத்து முதலீடுகளை மேற்கொள்வார்கள் ? இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில் பலருக்கும் தொழில் வாய்ப்புக்களும் அற்றுப்போயுள்ளன.

இதே போக்கில் வெளிநாட்டு கொள்கைகளிலும் நாடு முறையற்ற விதத்தில் செல்லுமாயின் எதிர்காலத்தில் ஜி.எஸ்.பி. சலுகையும் அற்றுப்போகும் என்ற சந்தேகம் ஏற்படுகிறது. பொருளாதாரம் இவ்வாறு வீழ்ச்சியடைந்து கொண்டு செல்கின்ற நிலையில் சேனா படைப்புழுவும் விவசாயிகளை நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றது. இவ்வாறான நிலையில் 2021 ஆம் ஆண்டிலாவது நாட்டை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது ஒரேயொரு கோரிக்கையாகும்” என்றார்.

பிரான்ஸிலும் புதிய கொரோனோ வைரஸ்

பிரித்தானியாவில் வேகமாக பரவிவரும் புதிய வகை கொரோனோ வைரஸின் தாக்கம் தற்போது பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் அவதானிக்கப்பட்டுள்ளது.

கடந்த 19 ஆம் நாள் பிரித்தானியாவில் இருந்து பிரான்ஸிற்கு வந்தவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இந்த புதிய கொரோனோ வரைஸ் நோய் கண்டறியப்பட்டுள்ளதாக பிரான்ஸின் சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் புதிய வகை கொரோனோ வைரஸ் கண்டறியப்பட்டதை தொடர்ந்து 40 இற்கும் மேற்பட்ட நாடுகள் பிரித்தானியாவுக்கான பயணத்தடையை விதித்திருந்தன.

அதேசமயம், யப்பான், டெனமார்க், அவுஸ்திரேலியா, நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் இந்தப் புதிய கொரோனோ வைரஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன. நோயாளிகளில் பலர் பிரித்தானியாவில் இருந்து வந்தவர்கள் என அவை மேலும் தெரிவித்துள்ளன.

சிறைச்சாலைகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

சிறைச்சாலை கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மேலும் 54 பேர்  கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது சிறைச்சாலைகளில் நெருங்கிய தொடர்பு கொண்ட கொரோனா தொற்றளர்களின் எண்ணிக்கை 3ஆயிரத்தை 709 ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரம் இலங்கையில் பல்வேறு இடங்கள் தனிமைபடுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ள நிலையில், இத் தொற்றினால் இதுவரை 191 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாநகரசபை, வர்த்தக நிலையங்களுக்கு எச்சரிக்கை

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையங்கள் மூடப்படும் என்பதுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு சட்ட நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் இந்த நடைமுறை இறுக்கமாக நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகாரசபைக்குட்பட்ட பகுதியில் கொரோனா அச்சுறுத்தலை தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆராயும் கூட்டம் இன்று மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்  தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ,மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களத்தின் தொற்றியல் வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் குணநாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருவதன் காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றினை தடுப்பது தொடர்பான வழிவகைகள் குறித்து ஆராயப்பட்டது.

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வந்து மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்துவது மற்றும் அப்பகுதிகளில் இருந்து வரும் மக்களை கட்டுபடுத்துவது தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது.

IMG 4293 மட்டக்களப்பு மாநகரசபை, வர்த்தக நிலையங்களுக்கு எச்சரிக்கை

காத்தான்குடி பகுதிகளில் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக அங்கிருந்து வரும் வர்த்தகர்களை கட்டுப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வர்த்தக நிலையங்களை கொண்டவர்கள் அங்கே தங்கியிருந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிப்பது எனவும் தங்குமிட வசதிகள் இல்லாதவர்களை மாநகரத்திற்குள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தற்காலிமாக தவிர்த்துக்கொள்வது எனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. வீதியோர வியாபாரங்களை முற்றாக நிறுத்துவது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

காத்தான் குடியில் இருந்துவரும் வர்த்தகர்கள் தங்கக்கூடிய வர்த்தக நிலையங்களை மட்டும் திறக்க வேண்டும் எனவும் காத்தான்குடிக்குள் இருந்துவரும் ஊழியர்களை இடைநிறுத்திவிட்டு நகருக்கள் இருப்பவர்களைக்கொண்டு வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பணிக்கப்பட்டுள்ளதாக இதன்போது மாநகர முதல்வர் தெரிவித்தார்.

வர்த்தக சங்கம் இதற்கான பூரண ஒத்துழைப்பினை வழங்கவேண்டும். இங்கு தங்குபவர்களுக்கு சுகாதார வசதிகளுடன் வசதிகள் ஏற்படுத்தப் பட வேண்டும். அது தொடர்பில் இன்று மாலைக்குள் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் களவிஜயம் செய்து உறுதிப்படுத்தியதன் பின்னர் அவரது வியாபார செயற்பாடுகளுக்கு மாநகரசபை அனுமதி வழங்கும். இது தொடர்பான அறிவித்தல்கள் இன்று ஒலிபெருக்கி மூலம் செய்யப்படும். சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடப்பதன் மூலம் பொதுமக்கள் இந்த தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.

அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி யாழில் போராட்டம்

சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் அவர்களின் விடுதலைiயை வலியுறுத்தியும் இன்று யாழ். நல்லூர் ஆதீன முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அரசியல் கைதிகள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் குரலற்றவர்களின் குரல் அமைப்பு இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

0?ui=2&ik=008a654ed4&attid=0.1 அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி யாழில் போராட்டம்

இன்று முற்பகல் 10 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோவில் பின்புறமாக உள்ள நல்லை ஆதீன முன்றலில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தற்போது நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றின் அபயாத்தை கருத்தில் கொண்டு, சமூக இடைவெளியை பின்பற்றியும் சுகாதார நிடைமுறைகளை கடைப்பிடித்தும் இடம்பெற்ற இந்த போராட்டத்தில், அரசியல் பிரமுகர்கள், மத தலைவர்கள், அரசியல் கைதிகளின் உறவுகள், சிவில் சமூக அமைப்புக்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டனர்.

1,400 செல்போன் கோபுரங்கள் சேதம் – விவசாயிகள் மீது குற்றச்சாட்டு

வேளாண் சட்டங்களை எதிர்த்து 1,400 செல்போன் கோபுரங்களை சேதப்படுத்தியதாக பஞ்சாப் விவசாயிகள் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் முற்றுகையில் ஈடுபட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், தங்கள் போராட்டத்தை 1 மாதத்துக்கு மேலாக தொடர்ந்து வருகின்றனர்.

கொரோனா அச்சுறுத்தல், கடுமையான குளிர் போன்ற சவால்களையும் மீறி இந்த போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இதுவரை 1,400 செல்போன் கோபுரங்களை பஞ்சாப் விவசாயிகள் சேதப்படுத்தி இருக்கிறார்கள் என  குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பஞ்சாப்பில் தொழிலதிபர்களான அதானி, அம்பானி போன்றவர்களின் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான செல்போன் கோபுரங்களை விவசாயிகள் சேதப்படுத்தி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களால் பெருநிறுவனங்களுக்கே லாபம் என குற்றம் சாட்டி வரும் விவசாயிகள், தங்கள் கோபத்தை அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகளின் மீது காட்டுவதாக பஞ்சாப்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்று- ஆன்டிபாடி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த பத்து பேருக்கு, அவசர பாதுகாப்புக்காக, ஆன்டிபாடிக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது போன்ற சோதனை முறை நடைபெறுவது இதுவே முதல்முறை.

கடந்த எட்டு நாட்களில், யார் எல்லாம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்தார்களோ அவர்களுக்கு இந்த சோதனை மருந்து வழங்கப்படும்.

இந்த சோதனையில் நல்ல முன்னேற்றம் இருந்தால், கொரோனாவால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பிருக்கும் மக்கள் மற்றும் இதுவரை கொரோனா தடுப்பு மருந்து பெறாதவர்கள் அல்லது பெற முடியாதவர்களை பாதுகாக்கும். அதோடு வைரஸ் பரவுவதையும் குறைக்க உதவும்.

இந்த சோதனை பிரிட்டனில், யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் லண்டன் ஹாஸ்பிட்டல்ஸ் (யூசிஎல்ஹெச்) என்ஹெச்எஸ் ட்ரஸ்டில் நடந்து கொண்டிருக்கிறது.

இருவேறு ஆன்டிபாடிக்களை கொரோனா தொற்றுள்ள ஒருவரின் உடலில் செலுத்தினால், அவர் உடலில் கொரோனா வளர்வதை தடுக்குமா அல்லது குறைந்தபட்சம் அவர் உடல் நிலை மோசமடைவதையாவது தடுக்குமா என இந்த ஆய்வில் சோதித்துப் பார்க்கப்படுகிறது.

கொரோனா தடுப்பு மருந்து ஒருவரின் உடலை முழுமையாகப் பாதுகாக்க வாரக் கணக்கில் கால அவகாசம் தேவை. அதாவது, ஒருவர் உடலில் ஏற்கனவே கொரோனா மேம்பட்டுக் கொண்டிருந்தால், கொரோனா தடுப்பு மருந்து கொடுப்பது மிகவும் தாமதமான முடிவு.

ஆஸ்ட்ராசெனிகா மருந்து நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ’மோனோகுளோனல் ஆன்டிபாடி சிகிச்சை’ முறை, கொரோனா வைரஸை உடனடியாகச் செயல்படவிடாமல் தடுக்கும். அதோடு ஓர் ஆண்டு காலம் வரை நோய் தொற்றில் இருந்து பாதுகாப்பளிக்கும்.

கொரோனா வைரஸ் தொற்றுள்ள ஒருவருடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவமனை நோயாளிகள் மற்றும் பராமரிப்பு இல்லங்களில் இருப்பவர்களுக்கு இந்த சிகிச்சையளிக்கலாம்.

மாணவர்கள் தங்கும் விடுதிகளில், ஒரு சிலருக்கும் கொரோனா வந்தால் கூட அது மிகப் பெரிய பரவலை ஏற்படுத்தும். அவைகளைத் தடுக்க இந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்தலாம்.

யூ சி எல் ஹெச்-ஐ சேர்ந்த வைராலஜிஸ்ட் மருத்துவர் கேத்தரின் ஹொலிஹன் தலைமையிலான குழு, இந்த சோதனையை மேற்கொள்ள 1,000 தன்னார்வலர்களைத் தேர்வு செய்ய விரும்புகிறார்கள்.

அதிலும் மருத்துவமனைகள் மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதிகள் போன்ற கொரோனா தொற்று பரவியிருக்க வாய்ப்பிருக்கும் இடங்களில் இருந்து தன்னார்வலர்களைத் தேர்வு செய்ய விரும்புகிறார்கள்.

இந்த சோதனையில் தன்னார்வலராகச் சேர விரும்புபவர்கள், அவர்களோடு தொடர்பு கொண்ட யாராவது ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த தடுப்பு மருந்து, ஆன்டிபாடிக்களை தானமாகக் கொடுப்பது மூலம் செயல்படும் என்கிறார் மருத்துவர் ஹொலிஹன்.

”இந்த ஆன்டிபாடிக்கள் இணை, கொரோனா வைரஸை செயலற்றதாக்கும் என்பதை நாங்கள் அறிவோம். எனவே, இந்த ஆன்டிபாடிக்களை ஊசி மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மனிதர்களுக்கு கொடுத்தால், உடனடியாக அவர்கள் உடலில் கொரோனா மேம்படுவதிலிருந்து பாதுகாப்பு கிடைக்குமா? என்பதைக் கண்டுபிடிக்க விரும்புகிறோம்,”

கர்பிணிப் பெண்கள், வெறி நாய்க்கடி மற்றும் அம்மை போன்ற நோயால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு இந்த சிகிச்சை முறையை ஏற்கனவே வழங்கி இருக்கிறார்கள் என விளக்குகிறார் ஹொலிஹன்.

வைரஸ் பரவவுவதற்கு முன்

ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கு முன், அவருக்கு இதே ஆன்டிபாடி சிகிச்சையை வழங்கினால், அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருப்பார்களா? என யூசிஎல்ஹெச்-ல் மற்றொரு சோதனையும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த சிகிச்சை முறை வெற்றி பெற்றால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புத் திறனைக் குறைக்கும் கீமோதெரப்பி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

புற்றுநோய் & ஹெச்.ஐ.வி தொற்றுள்ள பலருக்கும் இந்த சிகிச்சை சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது, ”இது அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி, கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு பலன் அளிக்க வைக்கலாம்,” என்கிறார் இந்த சோதனையை நடத்தி வரும் தொற்றுநோயியல் ஆலோசகர் மருத்துவர் நிக்கி லாங்லி.

”யாருக்கெல்லாம் கொரோனா தடுப்பு மருந்து வேலை செய்யாமல் போகுமோ, அவர்களுக்கு எல்லாம் ஒரு பாதுகாப்பு போல இந்த சிகிச்சை முறையை வழங்கலாம். இதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம்.” என்கிறார் லாங்லி.

கொரோனா தடுப்பு மருந்து கொடுக்கப்படுவதற்கு முன், கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பவர்களைப் பாதுகாக்க இந்த சிகிச்சை முறை உதவியாக இருக்கலாம் என்கிறார் ஹொலிஹன்.

ஆனால், இந்த சிகிச்சை முறையை கொரோனா தடுப்பு மருந்துக்கு மாற்றாக பரிந்துரைக்கப்படவில்லை எனவும் குறிப்பிடுகிறார் ஹொலிஹன். அதோடு ஒரு டோஸ் ஆன்டிபாடியைப் பெறுவதற்கு அதிக அளவில் செலவழிக்க வேண்டி இருக்கும் என்பதையும் குறிப்பிடுகிறார்.

பிரிட்டனின் சில பகுதிகளிலும், அமெரிக்காவிலும் இந்த ஆன்டிபாடி சோதனைகள் நடத்தப்படும்.

ஆனால் இப்போதைக்கு லண்டன் நகரத்தில் மட்டுமே இந்த சோதனைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆன்டிபாடி மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்த இரு சோதனைக்கான முதற்கட்ட முடிவுகள், அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு முன்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி – பிபிசி தமிழ்

அவுஸ்திரேலிய விடுதிகளில் சித்திரவதைகளுக்கு உள்ளாகும் அகதிகள்

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து மருத்துவ சிகிச்சைக்கு என அழைத்து வரப்பட்ட அகதிகள் அவுஸ்திரேலிய விடுதிகளில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

இதில் சுமார் 65 அகதிகள் வேறொரு விடுதிக்கு இடமாற்றப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

“முந்தைய விடுதிகளில் ஜன்னல் இருந்தது. அதன் மூலம் வெளியில் எங்கள் பார்த்து புன்னகைப்பதையும் கையசைப்பதையும் பார்க்க முடிந்தது. இப்போதைய விடுதிகளில் எந்த ஜன்னலும் இல்லை,” எனக் கூறியிருக்கிறார் விடுதியில் சிறைவைக்கப்பட்டுள்ள அகதியான Mostafa Azimitabar.

ஆப்கானிஸ்தானின் ஏகாதிபத்திய போரிலிருந்து, இலங்கையின் இனப்படுகொலைப் போரிலிருந்து, ஈரானிலிருந்து என உலகின் பல நாடுகளில் அச்சுறுத்தலை எதிர்கொண்ட நூற்றக்கணக்கான மக்கள் அகதிகளாக அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்திருக்கிறார்கள்.

இவர்கள் பல ஆண்டுகளாக மனுஸ்தீவு, நவுருத்தீவு ஆகிய கடல் கடந்த தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில், அவுஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்கு என சுமார் ஓராண்டுக்கு முன்பு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

இந்த அகதிகளே தற்போது அவுஸ்திரேலிய விடுதிகளில் சித்திரவதைகளுக்கு உள்ளாகி வருவதாகக் கூறப்படுகின்றது. இந்த விடுதிகளை அவுஸ்திரேலிய அரசு தடுப்பிற்கான மாற்று இடமாகப் பயன்படுத்தி வருகிறது.

“மனுஸ்தீவில் இருந்ததை விட அவுஸ்திரேலியாவில் இருப்பது சிரமமாக இருக்கிறது. ஒரு மணி நேரம் உடல்பயிற்சிக்காக அறையில் இருந்து வெளியில் அனுமதிக்கப் படுகிறோம். அதன் பின்னர் நாள் முழுதும் படுக்கையிலும் நாற்கலிலுமே கழிக்கிறோம்,” என கார்டியன் ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார் ஓர் அகதி.

இலங்கையில் புற்று நோயாளர்கள் அதிகரிக்க காரணம் என்ன? – மருத்துவர் . சி.யமுனாநந்தா கருத்து

இலங்கையில் கடந்த சில தசாப்தங்களாக புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இது குறித்து மருத்துவர் . சி.யமுனாநந்தா விளக்குகையில்,

பெரும்பாலான புற்று நோயாளர்கள் மிகவும் பிந்திய நிலையிலேயே இனம் காணப்பட்டு வருகின்றனர். பிந்திய நிலையில் இனம் காணப்படும் நோயாளர்கள் குணமடையும் வீதம் குறைவாகும்.

மேலும் இது பெரும் பொருளாதார சுமையினை ஏற்படுத்துகின்றது. ஆரம்ப நிலைகளில் புற்று நோயினைக் கண்டறிந்தால் சிகிச்சை வெற்றியளிக்கும் வீதம் அதிகமாகும், எனவே புற்று நோயாளிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக மருத்துவ ஆலோசனை வழங்களில் முறையான நடைமுறை அவசியமாகும். புற்று நோயாளர்கள் பல தடவைகள் படிப்படியான நோய் அறிகுறிகளுடன் வைத்திய சேவையை நாடிய போதிலும் பிந்திய நிலையிலேயே கண்டறியப்படுகின்றனர்.

(விசேட சேவை வழங்கல்) அமைப்பாக புற்று நோயினை ஆரம்ப நிலையில் கண்டறியும் நிலையம் வைத்தியசாலைகளில் இயங்குதல் அவசியமாகும். இதன் மூலம் வெளி நோயாளர் பிரிவில் ஒரே தடவையில் குறுகிய நேரத்தில் மருத்துவப் பரிசோதனையினை மேற்கொள்ளலாம்.

புற்று நோயினை ஆரம்ப நிலையில் இனம் காணும் சிகிச்சை நிலையத்தினால் பொதுவான புற்று நோய்களான

வாய்ப் புற்று நோய்
மார்பகப் புற்று நோய்
கருப்பைப் புற்று நோய் ஆகியவற்றைக் கண்டறிந்து குணப்படுத்த முடியும்.

இலங்கையில் ஆண்டுதோறும் கண்டறியப்படும் புற்று நோய்களில் ஆண்களில் கண்டறியப்படும் புற்று நோய்களில் வாய்ப் புற்று நோய் 16 வீதம் ஆகவும் பெண்களில் கண்டறியப்படும் புற்று நோய்களில் மார்பகப் புற்று நோய் 25 வீதம் ஆகவும் காணப்படுகின்றது. தைரோயிட் புற்று நோய், கருப்பைக் கழுத்துப் புற்று நோய் என்பன சுமார் 10வீதமாகக் காணப்படுகின்றன.

மார்பகப் புற்று நோயினை ஆரம்பத்தில் கண்டறியவும் கருப்பைக் கழுத்துப் புற்று நோயினை ஆரம்பத்தில் கண்டறியவும் வாய்ப் புற்று நோயினை ஆரம்பத்தில் கண்டறியவும் இலங்கை சுகாதார அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது. அந்த வகையில் இலங்கையில் ஒன்பது மாவட்டங்களிலும் புற்று நோயினை ஆரம்ப நிலையில் கண்டறியும் நிலையங்கள் தாபிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்திற்கு உரிய புற்று நோய் ஆரம்ப நிலையில் கண்டறியும் மருத்துவ ஆலோசனைப் பிரிவு யாழ் போதனா வைத்தியசாலையிலும் இயங்கவுள்ளது.

புற்று நோயினை கண்டறிதலில் நோய் அறிகுறி அற்றவர்களில் விசேட பரிசோதனைகள் குறிப்பாக கருப்பைக் கழுத்துப் புற்று நோய் , மார்பகப் புற்று நோய் என்பனவற்றுக்கு மேற்கொள்ளப்படுகின்றது. நோய் அறிகுறி உடையவர்களில் விசேடமாக குருதிப் பரிசோதனை, கதிர்ப் படங்கள், மாதிரிக் குழியவியல், இழைவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

புற்று நோய் இறப்புக்களில் 30 – 50வீதம் தவிர்க்கக் கூடியவை. மேலும் ஆபத்தான பழக்கவழக்கங்களை விலத்துவதனால் புற்று நோய் ஏற்படும் வாய்ப்புக்கள் குறைவடையும். குறிப்பாக வெற்றிலை, பாக்கு மெல்லுதல், புகைப் பிடித்தல், மதுபானம் பாவித்தல் என்பன புற்று நோய்க்கு இட்டுச் செல்லும். அடுத்து ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களும், உடற் பயிற்சிகளும் சரியான உடல் நிறையைப் பேணுதலும் புற்று நோய் எம்மை அணுகாது காக்கும்.

உடலில் ஏற்படும் பரம்பரையலகு விவகாரங்கள் சில வேளைகளில் புற்று நோயினை ஏற்படுத்தலாம். மேலும் நமது பாவனையில் உள்ள இரசாயன நச்சுக்களும் புற்று நோயினை ஏற்படுத்தலாம்.

பொதுவான புற்று நோய்களாவன:

1. நுரையீரல் புற்று நோய்
2. மார்பகப் புற்று நோய்
3. உணவுக் கால்வாய்ப் புற்று நோய்
4. ஈரல்ப் புற்று நோய்
5. சுதையி புற்று நோய்
6. சிறு நீரகப் புற்று நோய்
7. கருப்பைப் புற்று நோய்
8. சூலகப் புற்று நோய்
9. மூளைப் புற்று நோய்
10. குருதிப் புற்று நோய்
11. முன்னிற்கும் சுரப்பிப் புற்று நோய்
12. என்புப் புற்று நோய

புற்று நோய்க்கான சிகிச்சையில் புற்று நோய் இழையங்களை அகற்றும் சத்திர சிகிச்சை, புற்று நோய்க் கலங்களை அழிக்கும் மருந்து மாத்திரைகள், ஓமோன் சிகிச்சைகள், கதிரியக்க சிகிச்சைகள் என்பன தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.

இவற்றுக்கு மேலாக உளவள ஆற்றுப்படுத்தல், வலி நீக்க சிகிச்சைகள், ஆன்மீக ஆற்றுப்படுத்தல் என்பனவும் இன்றியமையாதனவாகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.