Home Blog Page 1471

ஆட்கடத்தலைக் கண்காணிக்க மலேசிய கடற்படைக்கு அதிவேகப் படகுகள்

சட்டவிரோத குடியேறிகளை மலேசியாவுக்கு அழைத்துச் செல்லும் கடத்தல் செயல்களை கண்காணிக்க மலேசிய கடற்படைக்கு சுமார் 8.2 மில்லியன் மலேசிய ரிங்கட்டுகள் மதிப்பிலான 11 அதிவேகப் படகுகள் வழங்கப்பட்டுள்ளன. 

குறைந்த எடை மற்றும் அதிகத்திறன் கொண்ட Rigid Hull Inflatable படகுகள் என இது அழைக்கப்படுகின்றது.

சட்டவிரோத குடியேறிகளை வருகையைத் தடுக்க மேற்கொள்ளப்படும் Ops Benteng ரோந்து நடவடிக்கையில் இப்படகுகள் மலாக்கா நீர்ச்சந்தியில் பயன்படுத்தப்படும் எனக் கூறப்படுகின்றது.

ஜெனீவாவை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு – சுமந்திரன்

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை விவகாரம் எடுக்கப்படவிருக்கையில் அது தொடர்பில் சர்வதேச சமூகத்துடன் ஒன்றுபட்ட தமிழர் தரப்பாக ஊடாடுவது குறித்து பிற தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்துகின்றோம்.

இவ்வாறு ஊடகங்களுக்குத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

“ஜெனிவா விவகாரம் குறித்து சர்வதேசசமூகத்துடன் பேச்சுக்களை ஆரம்பித்துள் ளோம். சர்வதேச சமூகத்துடன் ஒன்றுபட்ட தமிழர் சக்தியாக ஊடாடவே நாம் விரும்புகின்றோம். இதற்காக எந்த அடிப்படையில் நாம் ஒன்றுபட்டுச் செயற்பட முடியும் என்பதை பிற தமிழ்க் கட்சிகளுடன் ஆராய்கின்றோம். இதற்காக அவற்றுடன் பேச்சுக்கள் ஆரம்பமாகியுள்ளன” என்றார் அவர்.

உலக நாடுகள் அவசர நிலையை அறிவிக்க வேண்டும்- ஐ.நா

உலக நாடுகள் பருவநிலை தொடர்பான அவசர நிலையை அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா. தலைமைச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் அறிவுறுத்தியுள்ளார்.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் 5ம் ஆண்டு தினத்தை ஒட்டி நடந்த ஒரு முக்கியமான உலகத் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பேசும்போது அன்டோனியா குட்டரெஸ் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

“38 நாடுகள் ஏற்கெனவே பருவநிலை அவசர நிலையை அறிவித்துள்ளன. இதே போன்ற அவசர நிலையை உலகில் உள்ள எல்லா நாடுகளும் அறிவிக்கவேண்டும். கார்பன் நியூட்ராலிட்டி என்ற நிலையை எட்டும் வரை இந்த அவசர நிலை தொடரவேண்டும்” என்று குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் உலகை அலைகழித்து வருகிறது. இந்நிலையில் அடுத்து உலகை அச்சுறுத்தும் பெரிய சிக்கலாக பருவநிலை மாற்றம் இருக்கும் என்று வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஐ.நா. தலைமைச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸின் இந்த  அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகின்றது.

இந்தியாவில் தீவிரம் அடையும் விவசாயிகள் போராட்டம்

இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி மாநில எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த போவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், டெல்லியை ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளை போராடும் விவசாயிகள் முற்றுகை இட்டுள்ளதால், அங்கு கட்டணம் ஏதுமின்றி வாகனங்கள் கடந்து செல்வதைக் காட்டும் காணொளிகள் வெளியாகியுள்ளன.

இதன் பின்னணியிலேயே, ஹரியானா மாநிலம் குர்கான் எல்லையில் சுமார் 2,000 காவல் துறையினரும், ஃபரிதாபத் எல்லையில் சுமார் 3,500 காவல் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சில விவசாய சங்கங்களின் தலைவர்கள், இந்திய அரசு புதிதாக இயற்றி உள்ள மூன்று சட்டங்களுக்கும் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர் என்று இந்திய அரசின் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்  தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய சட்டங்கள் மூலம் தங்களுக்கு எவ்வாறு பலன் கிடைக்கிறது என்பதையும் தம்மைச் சந்தித்த விவசாயிகள் தெரிவித்தனர் என்று நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படவில்லை

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும்  PCR பரிசோதனைகளில் கடந்த 8ஆம் திகதிக்குப் பின்னர் எந்த ஒரு கொரோனா தொற்றாளர்களும் இனங்காணப்படவில்லை என மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தெரிவித்தார்.

மாவட்ட கொரோனா தடுப்பு செயலனியின் விசேட கூட்டம் அரசாங்க அதிபர் கருணாகரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இம்மாவட்டத்தில் வணக்கஸ்தலங்களில் மக்கள் கூடுவது தொடர்பாக அமுலில் இருந்த கட்டுப்பாடு குறைக்கப்பட்டு ஒருதடவையில் 25 நபர்கள் வணக்க வழிபாடுகளில் ஈடுபட இச்செயலனி அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் அனைத்து பொதுமக்களும் சுகாதார வழிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் அக்கரைப்பற்று, கல்முனைப் பிரதேசங்களில் அதிகரித்துவரும் கொரோனா நோய் காரணமாக அப்பிரதேசங்களில் இருந்து மட்டக்களப்பிற்கு கடமைக்கு வரும் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் தொடர்ந்து வீட்டிலிருந்து கடமையினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மருதனார்மடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா

யாழ். உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதனார் மடத்தில் நேற்றுமுன்தினம் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நபரின் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூட பரிசோதனையில் இவ்வாறு தொற்று உறுதியானது என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்

இதன்படி நேற்றுமுன்தினம் தொற்று உறுதியானவரது மனைவி (வயது 38), மகள் (வயது 12), இரு மகன்கள் (வயது 3 – 6), மாமியார் (வயது 63) மற்றும் மைத்துனர் (வயது 25) ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, மருதனார்மடத்தில் வியாபாரிகள் உட்பட 31 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி என நேற்று மாலை வெளியான தகவலை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மறுத்தார்.

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 2 பேருக்கும் நேற்றைய பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நேற்று 300 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது எனவும், அவர்களில் 8 பேருக்கே கொரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

இலங்கை இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பம்

டிசம்பர் 22ம் திகதி மற்றும் 30ம் திகதிகளில் இந்திய,இலங்கை மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர்  அறிவித்துள்ளார்.

கடந்த 2004ம் ஆண்டில் இருந்து இந்திய மீனவர்களின் எல்லை தாண்டி மீன் பிடிப்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து 5 முறை நடந்துள்ளன.

இமேஸ்வரம், சென்னை மற்றும் இலங்கை தலைநர் கொழும்பிலும் இரு நாட்டு அரச அதிகாரிகள் ஏற்பாட்டில், 5 முறை நடந்த பேச்சுவார்த்தையில், இருநாட்டு மீனவர்களுக்கிடையே சுமூக முடிவு ஏற்படாததால் தோல்வியில் முடிந்தன.

இந்நிலையில், சமீபகாலங்களாக தமிழக மீனவர்கள் இலங்கையின் கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாவதும் படகுகள் சேதப்படுத்தப்படுவதும் அதிகரித்துள்ளன.

இதையடுத்து வரும் டிசம்பர் 22ம் திகதி மற்றும் 30ம் திகதிகளில் மீண்டும் இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.

மாடர்னா நிறுவனத்திடமிருந்து கொரோனா தடுப்பு மருந்து பெறுவதற்கு அமெரிக்கா ஒப்பந்தம்

மாடர்னா நிறுவனத்திடமிருந்து கூடுதலாக 100 மில்லியன் டோஸ்க  கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்க  அமெரிக்கா ஒப்பந்தம்  செய்துள்ளது.

 “மாடர்னா நிறுவனத்திடமிருந்து கூடுதலாக 100 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்கவுள்ளோம் என அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்பு மருந்துகள் அடுத்த வருடம் ஜூன் மாதம் 2021-ம் ஆண்டுக்குப் பிறகு கிடைக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்தில் கொரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,அமெரிக்காவில் இதுவரை 1.6 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல் – நேற்றும் – இன்றும் – (தேடல் 4) – புலவர் நல்லதம்பி சிவநாதன்

இலங்கையில் தமிழர்கள் வந்தேறுகுடிகளா?

1956இலிருந்தே சிங்களப் பௌத்த பெரும்பான்மை தொடர்ச்சியாக முன்வைத்து வந்த வாதங்களுள் ஒன்று, இலங்கையில் தமிழர்கள் வந்தேறுகுடிகளே என்பது தான்!

இதனைத் தான் சிங்கள மக்களுக்குப் போதித்து வந்தது சிங்களப் பௌத்த இனவாதப் பீடங்கள். இவை கல்விப் பீடங்களாக இருக்கலாம், மதபீடங்களாக இருக்கலாம், இல்லை அரசியல், பொருளாதார பீடங்களாக இருக்கலாம். இவையெல்லாம் ஒருங்கிணைந்த நிலையில் இவ்வாறான ஒரு பிரச்சாரக் கருத்தியலையே எமது பாலப் பருவத்திலும், சிறுவர் பராயத்திலும் பேசியும், எழுதியும், போதித்தும் வந்தன.

தமிழர்கள் சிங்களருக்குப் பின்னர் வந்து குடியேறியதன் விளைவாகவே இவர்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வந்து குடியேறினார்களெனவும், குறிப்பாக இலங்கையின் பிடரிப் பக்கமாகக் கடல் வழியே வந்து குடியேறினரெனவும் சிங்களப் புத்திசீவிகளும், மதவாதிகளும் பிரச்சாரம் செய்து வந்தனர். இதனடிப்படையிற்றான் இலங்கைத் தீவு சிங்களர்க்கே என்ற வாதம் சிங்கள மக்களினால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கருத்தியல் தத்துவமாகப் பரவி வந்தது.

உண்மையில் போர்த்துக்கேய, ஒல்லாந்த, பிரித்தானிய ஆக்கிரமிப்புக்களினால் சிதறடிக்கப்பட்டு சின்னாபின்னப்படுத்தப்பட்டு அழித்தொழிக்கப்பெற்ற தமிழர் ராசதானிகள் பற்றியும், ஆண்ட மன்னர்கள் பற்றியும், எமது தொல்குடி வரலாறு பற்றியும் ஆழமாகவும், வரலாற்று ஆதாரங்களோடும் அறியக்கூடிய ஒரு வாய்ப்பற்ற தேசிய இனமாகவே நாம் அப்போது இருந்தோம் என்பதில் எனக்கு எதுவித ஒளிவுமறைவுமில்லை.

இலங்கையின் பிடரிப் பக்கம் அதாவது வடமராட்சி, வடமத்திய கிழக்கிலங்கைக்கும் தென்னகத்திற்குமிடையிலான பூர்வீக நிலவியல் –பண்பாட்டு வாழ்வியல் – தொல்லியற் தொடர்புகளைப் பற்றி சிந்திப்பதற்கான எதுவித தூண்டுதலும், உசாத்துணைகளும் எமக்கு அப்போது இருக்கவில்லையென்றே கூற முடிகிறது.

நான் முன்னர் குறிப்பிட்டது போல ஆங்கிலக் கல்வி கற்றவர்களும், மேற்குலக ஆய்வுகளையே தமது உயிர்மறைகளாக ஏற்றுக் கொள்ளப்படுபவர்களையும் நம்புகின்ற ஓர் அப்பாவித்தனமான அறிவியல் – கல்விப் பண்பாடே நம்மிடை அக்காலங்களிற் காணப்பட்டது எனலாம்.

எனவே இந்நிலையில் இலங்கையின் பூர்வீகக் குடிகள் சிங்களவர்கள் தானென எம்முள் சிலரும் வாதிக்கக் கேட்டுள்ளோம். இலங்கையின் பூர்வீகக் குடிகள் தமிழர்களாக இருந்திருந்தால், ஏன் பிறமாகாணங்களில் தமிழர்கள் குடியேறியிருக்கவில்லை என்று வாதிப்பவர்களும் நம்மிடையே இருந்துள்ளார்கள்.

நாகர் – இயக்கர் வரலாறு பற்றியெல்லாம் எமது பள்ளிப் பாடங்களில் அங்குமிங்குமாக ஒருசில தகவல்களை அறிந்திருப்போமேயொழிய அவை பற்றியும் எமக்குப் பெரிய தெளிவு நிலை அப்போது இருக்கவில்லை.

இதில் இன்னுமொரு சுவாரசியமான விடயமென்னவெனில், அக்காலங்களில் க.பொ.த (சாதாரணம்) வகுப்பிலேயே எமது உளவியலில் ஒரு பெரிய பிளவு ஏற்படுத்தப்பட்டு விடுவதுண்டு. “நீ விஞ்ஞானப் பிரிவிற்குள் நுழையப் போகிறாயா? இல்லை கலைப் பிரிவிற்குள் நுழையப் போகிறாயா?” என்ற கேள்வி எம்முன் பூதாகரமாக எழுந்து நிற்பதுண்டு. மொழி, கலை, இலக்கியம், அரசியல், சரித்திரம், வரலாறு என்ற பரப்புகளெல்லாம் கலைப்பிரிவிற்குள் அடங்கி விடும். சூழலில் விஞ்ஞானப் பிரிவு மாணவர்களைப் பொறுத்தவரை, இவை பற்றிய அறிவுத் தேடல்களோ, தெளிவுகளோ கிடைக்கின்ற வாய்ப்புகள் பெரும்பாலும் இருப்பதில்லை.

தமிழர் சமுதாயத்தைப் பொறுத்தவரை, தமது பிள்ளைகள் விஞ்ஞானப் பிரிவில் படித்துப் பட்டம் பெறுவது ஒரு மேலதிகமான கௌரவமிக்க சாதனையாக எண்ணினார்களேயொழிய கலைப்பிரிவினைப் பெரிய அளவில் அவர்கள் கவனமெடுக்கவில்லையென்றே எண்ணத் தோன்றுகிறது. ஏன் இப்போதும் இந்நிலை மாறிவிட்டதெனக் கூறுவதற்கில்லை. இதற்கான இன்னுமொரு முக்கிய காரணமும் இருந்துள்ளது.

தொழில் வாய்ப்பு என்று வரும் போதும் பொருளாதாரத்திற் பின்தங்கிய குடும்பச் சூழல் என்று வரும் போதும் அக்காலங்களில் பெற்றோர்கள் விஞ்ஞானப் பிரிவினையே முதன்மையான ஒரு “தப்புதற்கான தந்திரோபாயமாக (Escaping Strategy) மேற்கொள்ளும் ஒரு கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டார்களென்பதையும் நாம் புறக்ணித்துவிட முடியாது.

தனது பிள்ளை ஒரு வைத்தியராகவோ, பொறியியலாளராகவோ, கணக்காளராகவோ வரவேண்டுமெனப் பிரார்திக்கின்ற பெற்றோர்களையே அன்றைய காலகட்டத்தில் எம்முன் உலவினர் என்பது ஒரு உண்மையாகும்.

பல்கலைக்கழக புகுமுகப் பரீட்சை என்பது எமது பெற்றோர்களையும், அவரது பிள்ளைகளையும் பொறுத்தவரையில் ஒரு சாதனைக் களமாகவே அப்போது இருந்து வந்தது.

எனினும் 1956இன் சிங்கள மொழித்திணிப்பு, பின்னர் 1970இன் ஆரம்பகாலங்களில் நிறைவேற்றப்பட்ட தரப்படுத்தல் என்ற இரண்டு சிங்களப் பௌத்த இனவெறிச் செயற்பாடுகளின் விளைவாகப் பலவித மாற்றங்களையும், அழுத்தங்களையும் அனுபவித்தமை பலரும் அறிந்ததே. தமிழர் தேச தேசிய உணர்வுகளை ஊற்றெடுத்துப் பாய வைத்த சமகால வரலாற்றின் மைந்தர்களாகவே இவற்றை எம்மால் காணமுடியும்.

எனக்கு நல்ல ஞாபமிருக்கிறது. அக்காலத்தில் க.பொ.த(உயர்தரம்)  வகுப்பிற் படிக்கும் ஒரு மாணவனையோ, மாணவியையோ ஒரு வயோதிபப் பாட்டனோ, பாட்டியோ கண்டவுடன் கேட்கும் கேள்விகளுள் ஒன்று நீர் “art’ ஓ “சயன்ஸ்“ ஓ என்பதாகும்.

எனவே மொழியறிவு, இலக்கிய அறிவு, பண்பாட்டு – வாழ்வியல் வரலாற்றறிவு கல்வி மட்டத்தில் ஒருவர் பெறுவதானால், அவர் கலைப்பிரிவு மாணவராக இருக்க வேண்டிய சூழலே அக்காலங்களில் இருந்து வந்ததெனக் கூறலாம்.

இதற்கு அப்பால் மொழியிலும், கலையிலும் இலக்கியத்தில் பண்பாடு, வாழ்வியல் வரலாற்றிலும் அக்கறையும், ஆர்வமும் கொண்டவர்களுள் பலர் தமிழர் தேசியப் பற்றுள்ளவர்களாகவும், ஆர்வலர்களாகவும் ஆற்றுகையாளர்களுமாகவே இருந்துள்ளனரென நான் அவதானித்து வந்துள்ளேன்.

நான் விஞ்ஞானக் கல்வியைத் தேர்வு செய்திருந்த போதும், எனது பாலப்பருவத்தின் ஈர்ப்புகள் ஆர்வங்கள், தொடர்புகள், ஆற்றல்கள், ஆளுமைகளின் வழி எனது முன்னோர் பற்றிய தேடலும், எமது தேச, தேசிய தெய்வ மரபுகள், தொன்மைகள் பற்றிய பிணைப்பும் என்னுள் ஒரு உயிரொளியாகவே சுடர்விட்டு வந்ததை என்னால் உணர முடிந்தது.

இதற்கு மேலாக எனக்குக் கிடைத்த அற்புதமான வாய்ப்புகள் – அனுபவங்கள் என்னை எமது தொல்குடி வரலாற்றோடு இறுகப் பிணைத்து வந்துள்ளதை ஒரு வரப்பிரசாதமாகவே நான் கருதுகிறேன்.

சிங்கள மொழித் திணிப்பு இனக் கலவரங்கள் தமிழ் மொழிக் கல்வி, தரப்படுத்தல் இவற்றினூடு பயணித்த அனுபவம் 1984இல் தமிழாராய்ச்சி மாநாட்டு இரவு வரை என்னுடன் தொடர்ந்து வந்துள்ளது.

1970 – 71களில் கொழும்பில் கற்ற போதும், கிளிநொச்சி – உருத்திரபுரம் பத்தாம் வாய்க்காலில் ஓர் ஆசிரியனாகப் பணியாற்றிய போதும் நான் சிங்களப் பௌத்த இனவெறியின் அகோர முகங்களைச் சந்தித்தவன்.

குறிப்பாக கிறிநொச்சியிற் கல்வி கற்பித்த காலங்களிற்றான் ஆனையிறவுப் பாலத்தில் சிங்கள இராணுவத்தால் ஏற்படுத்தப்பட்ட சோதனைச் சாவடிகளை ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும் பயணிகளுள் ஒருவனாக நான் ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக இருந்து வந்தேன்.

நாம் பயணிக்கும் பேருந்துகள் மறிக்கப்பட்டு, இராணுவத்தினால் சோதிக்கப்படும் கணங்கள் ஒரு ஞானியையும், கொலைகாரனாக மாற்ற வல்லது. எமது பெண்கள், தாயார், தங்கையர், தமக்கையர் மற்றும் முதியோர் பட்ட இன்னல்களை நான் நேரிற் கண்டிருக்கிறேன்.

அக்கணங்களிலெல்லாம் நாம் இலங்கையின் பூர்வீகக் குடிகளா? இல்லை வந்தேறுகுடிகளா என்ற கேள்விகள் என்னைக் குடைந்து கொண்டேயிருந்தன.

தொடரும்..

‘மீண்டு பிறந்தது போல் இருக்கிறது’: விடுதலை குறித்து அகதியின் கருத்து

“என்னால் இதை நம்பவே முடியவில்லை. மீண்டும் பிறந்தது போல் இருக்கிறது. நான் இப்பொழுது சுதந்திர மனிதன். என்னை காவல் காக்க இனி காவலாளிகளும் கிடையாது,” என அவுஸ்திரேலிய தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் குர்து அகதியான Farhad Bandesh.
2013ம் ஆண்டு படகு வழியாக அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த இவர் மனுஸ்தீவு சிறையில் 6 ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவர் ஜூலை 2019யில் முதல் சுமார் 1 ஆண்டுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டிருந்தாத் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மனுஸ் – நவுறுவிலிருந்து வந்து அவுஸ்திரேலியாவில் தடுத்துவைக்கப்பட்ட அகதிகளில் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மனுஸ் மற்றும் நவுறு தீவுகளிலிருந்து மருத்துவ காரணங்களுக்காக அவுஸ்திரேலியா கொண்டுவரப்பட்டு இடைத் தங்கல் முகாம்களில் பல மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள சுமார் இருநூறு அகதிகளில் முதல்முறையாக இருவர் விசா வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளதாக ABC ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒருவர் கடந்த திங்கட் கிழமை பிறிஸ்பன் கங்காரு ஹோட்டலில் இருந்தும் இன்னொருவர் கடந்த புதன்கிழமை மாலை மெல்பேர்ன் குடிவரவு திணைக்கள இடைத்தங்கல் முகாமிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.