இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் 19 வயது பெண் ஒருவர் கூட்டுப்பாலியலுக்கு ஆளாகி கடுமையான காயங்களுடன் உயிரிழந்த சம்பவத்தில், அம்மாநில அரசிடம் விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், இந்தியாவில் கொரோனாவைவிட கொடிய நோயான ‘சாதி’ தன் கோரதாண்டவத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் கடும் நெருக்கடியைச் சந்தித்து வந்தாலும் தலித் மக்கள், ஆதிக்க சாதியினரால் மிக மோசமான பாதிப்புகளையும் அடக்குமுறைகளையும் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த, 19 வயது நிரம்பிய தலித் பெண் ஒருவர், கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி, வயல்வெளியில் உள்ள புற்களை வெட்ட சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த நான்கு பேர் அந்த பெண்ணை பலவந்தப்படுத்தி கூட்டுப்பாலியல் செய்துள்ளனர். பின்னர் இந்தக் கொடூரச் சம்பவத்தை அவர் வெளியில் சொல்லக்கூடாது என்பதற்காக அவரது நாக்கை வெட்டியுள்ளனர். மேலும் அவரது முதுகு, கழுத்து உள்ளிட்ட இடங்களிலும் கொடூரமாக தாக்கி இரத்த வெள்ளத்தில் சாலையில் வீசிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் முதுகெலும்பு உடைந்து சுயநினைவிழந்த நிலையில், அவரை கண்டெடுத்த குடும்பத்தினர் அருகே உள்ள உள்ளூர் மருத்துவ நிலையத்தில் சேர்த்துள்ளனர். பின் அங்கிருந்து அவர் அலிகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
கடந்த 13 நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சைக்காக டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் நேற்று உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அப்பெண்ணின் உடல் வலுக்கட்டாயமாக குடும்பத்தினரிடம் இருந்து பறிக்கப்பட்டு காவல்துறையினரால் இறுதி சடங்கு செய்யப்பட்டதாக அந்த பெண்ணின் உறவினர்கள் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இறப்பதற்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி, 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாகி பலியான தலித் பெண்ணுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றும், பாலியல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக ஊடகங்களில் வெளியானதகவல்களில், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விவரித்தது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தது ஆகியவை தொடர்பாகவும், அந்த பெண்ணின் சடலத்தை அதிகாலை 3 மணியளவில் தகனம் செய்ய உறவினர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த சம்பவங்கள் மிகவும் வலியைத் தருபவையாக உள்ளன என்று கூறியுள்ள மனித உரிமைகள் ஆணையம், மிகவும் கொடூரமாக துன்புறுத்தப்பட்டு அந்த பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதை உணர முடிகிறது என்றும், இதில் ஈடுபட்ட நபர்களின் செயல் சட்டத்தைக் கண்டு அஞ்சாதவர்களாக அவர்கள் இருந்தனர் என்றும் அறிய முடிகிறது என்று கூறியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இரு வாரங்களுக்குள் மாநில அரசு பதில் அனுப்ப வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. நடந்த சம்பவத்தை உத்தர பிரதேச மாநிலத்தின் எதிர்கட்சிகளான பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி கடுமையாக கண்டித்துள்ளன.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நீதி கிடைக்கவும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை கிடைக்கவும் அரசு உரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.