பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் பட்டியலில் கோட்டாபயவின் பெயர்–எல்லைகள் அற்ற நிருபர் அமைப்பு
2021ம் ஆண்டுக்கான பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் பட்டியலில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேவை எல்லைகள் அற்ற நிருபர் அமைப்பு இணைத்துக்கொண்டுள்ளது.
பத்திரிகை சுதந்திரத்தின் மீது தாக்குதலை மேற்கொண்ட உலக தலைவர்களின் படங்களை வெளியிட்டுள்ள எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு, அவர்கள் பயன்படுத்தும் முறைகள்,அவர்களுடைய விருப்பத்திற்குரிய இலக்குகள் மற்றும் அவர்கள் தங்கள் செயற்பாடுகளை நியாயப்படுத்தும் விதத்தில் வெளியிட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளது.
அதே நேரம் 2021 நடப்பாண்டு பட்டியலில் இலங்கை ஜனாதிபதியையும் எல்லைகள் அற்ற நிருபர்கள் அமைப்பு இணைத்துக்கொண்டுள்ளது.
ஜனாதிபதியின் படத்தை வெளியிட்டுள்ள எல்லைகள் அற்ற செய்தியாளர் அமைப்பு, பயங்கரம் மீண்டும் வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சி தமிழ் சிறுபான்மையினத்தவர்கள் அல்லது முஸ்லீம் சிறுபான்மையினத்தவர்களின் நிலைகள் குறித்து புலனாய்வுச்செய்திகள் என்பது மிகவும் கடினமான ஆபத்தானதாக காணப்படுகின்றது என எல்லைகள் அற்ற நிருபர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
துணிந்து கருத்துதெரிவிப்பதற்கு முற்படுபவர்கள் இரண்டு வகையான ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர் – ஒன்று நீதித்துறை சார்ந்தது, காவல்துறையினரின் பிடியாணையுடன் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன, இரண்டாவது உடல்ரீதியிலான அச்சுறுத்தல்கள், மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்படலாம் என தெரிவித்துள்ளது.
அத்துடன் முறைப்பாடு செய்யப்பட்டாலும் காவல்துறையினர் அந்த முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ள மறுக்கலாம் என எல்லைகள் அற்ற செய்தியாளர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் இலங்கையை அதன் வரலாற்றில் மோசமான இருள்படிந்த காலங்களிற்கு கொண்டுவந்துள்ளது என தெரிவித்துள்ள எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு, கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சி பத்திரிகையாளர்களுக்கு பழைய அச்சங்களை உருவாக்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.