அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயார் – வெளிவிவகார அமைச்சர் தினேஷ்
இரு தரப்பு மற்றும் பலதரப்பு விவகாரங்களில் பரஸ்பர நலன்களை முன்னேற்றுவதற்காக அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற இலங்கை தயாராக உள்ளதாக வெளி விவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்க செயலர் அன்ரனி பிளிங்கனுக்கு எழுதிய கடிதத்தில், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். அந்த கடிதத்தில், அமெரிக்காவின் சுதந்திரத்தின் 245 ஆவது ஆண்டு நிறைவின் நிகழ்விற்கு வெளிவிவகார அமைச்சர் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.
“1948 இல் இராஜதந்திர உறவுகள் நிறுவப் பட்டதிலிருந்து, அமெரிக்காவுடனான இலங்கையின் உறவுகள் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து விரிவடைந்து வருகின்றன.
எங்கள் இரு நாடுகளின் மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்காக இந்த பன்முக மற்றும் துடிப்பான கூட்டாண்மை மேலும் பலப்படுத்தப்பட்டு ஆழமடையும் என்று நான் நம்புகிறேன்” என்று குணவர்த்தன கூறியுள்ளார்.
இலங்கை உட்பட தேவைப்படும் நாடுகளுக்கு மில்லியன் கணக்கான டோஸ் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க அமெரிக்க ஜனாதிபதி பைடனின் சமீபத்திய முயற்சி உட்பட, கோவிட்-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்த அமெரிக்கா வழங்கிய விலை மதிப்பற்ற ஆதரவையும் உதவியையும் இலங்கை அரசாங்கமும் மக்களும் ஆழமாகப் பாராட்டுகின்றனர் என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.