மெக்சிகோவில் அதிகரித்த தீவிர வெப்ப அலை: 100க்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பு

மனித செயல்பாடுகளால் பூமியின் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வழக்கத்துக்கும் அதிகமான வெப்பநிலை உலக நாடுகளில் பதிவாகி வருகிறது.

இந்நிலையில், மெக்சிகோவில் கடந்த 3 வாரங்களாக நீடிக்கும் தீவிர வெப்ப அலையினால் 100க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெக்சிகோ சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “மெக்சிகோவின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த மூன்று வாரங்களாக வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. குறிப்பாக ஜூன் 18 முதல் 24 வரை மெக்சிகோவில் அதிதீவிர வெப்பம் பதிவாகி இருக்கிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. தீவிர வெப்பஅலை காரணமாக இதுவரை 100க்கும் அதிகமானவர்கள் பலியாகி இருக்கிறார்கள் . இதில் 64% இறப்புகள் நுவோ லியான் மாகாணத்தில் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் வெப்ப அலைக்கு ஒருவர் மட்டுமே பலியாகி இருந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.