தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்த உதிரிகள் எவருக்கும் வாக்களிக்க வேண்டாம்- – ஆனல்ட்

சிங்கள கட்சிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்த உதிரிகள் எவருக்கும் வாக்களிக்காமல் அவர்களை முற்றாக நிராகரிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் இம்மானுவல் ஆனல்ட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புத்தூர் ஆவரங்கால் பகுதியில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர்  மேலும் தெரிவித்ததாவது;

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வரலாறானது 1949 களில் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வுக்காக தொடர்ச்சியாக செயற்பட்டுவரும் கட்சி. எமது தலைவர்கள் நாட்டில் அவ்வப்போது உருவான ஒவ்வொரு அரசுகளுடனும் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வந்திருக்கின்றார்கள்.

இயலுமான அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. இதனை எவரும் மறுக்க முடியாது. கூட்டமைப்பு என்ன செய்தது? கூட்டமைப்பு என்ன செய்தது? என்ற வினா பலதரப்பினரதலும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. கூட்டமைப்பு பல விடயங்களை செய்திருக்கின்றது.

நாம் விளம்பர அரசியல் செய்பவர்கள் அல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருக்கலாம். அது தொடர்பில் ஆராய்ந்து அதனை நிவர்த்தி செய்து கொண்டு நாம் எமது தமிழ்த் தேசியத்தின் விடிவிற்கான பயணத்தில் தொடர்ச்சியாகப் பயணிக்க வேண்டுமே தவிர இடையிலே நின்று ஒவ்வொன்றுக்கும் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பம் யாவரும் அறிந்ததே. அதற்கே மக்கள் தமது ஆதரவுகளை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றார்கள். இப் பலம் பெரும் கட்சியை எவரும் இலகுவில் சிதைத்துவிட முடியாது. ஆனால் தற்போது இதனை சிதைத்து தமிழ் மக்களின் ஒற்றுமையினையும்,பலத்தையும் தவிடுபொடியாக்குவதற்கு பல்வேறு தரப்பினர்களும் முயற்சித்து வருகின்றார்கள்.

எம் இனத்தை கூறுபோடுவதற்காக ஒரு புறம் சிங்களக் கட்சிகளின் ஊடாக பல்வேறு முகவர்கள்; அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்ற மாயையை காட்டிக் கொண்டு வாக்கு கேட்கின்றனர். மறு பக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அற்ப சொற்ப விடயங்களுக்காக பிரிந்து சென்று போலித் தேசியத்தை பேசிக்கொண்டு தம்மை தமிழ்த் தேசிய வாதிகளாக காண்பித்துக் கொண்டு வாக்கு கேட்டு வருகின்றார்கள். இவர்கள் இரண்டு தரப்பினர் தொடர்பிலும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

சிங்களக் கட்சிகளில் வாக்குக் கேட்கும் எவருக்கும் தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்க முடியாது. அவர்களுக்கு அளிக்கப்படும் வாக்குகள் எமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து முன்னகர்த்தப்பட்ட 30 வருட போராட்டத்தையே கேள்விக்குற்படுத்துவதாக அமைந்துவிடும்.

எனவே தமிழ் மக்கள் சிங்களக் கட்சிகளுக்கு எமது பகுதிகளில் துளியும் இடம் இல்லை என்பதை தமது வாக்குகளால் காண்பிக்க வேண்டும். சிங்களக் கட்சிகளை மக்கள் இம்முறை முற்றாக நிராகரிக்க வேண்டும்.

அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று புதிய புதிய கட்சிகளை ஆரம்பித்து பின்னர் தற்போது தம்மை தமிழ்த் தேசியவாதிகளாக காண்பித்து வாக்கு கேட்போர்கள். இவர்களும் மறைமுகமாக சிங்கள அரசின் எதிர்பார்ப்பை நிறைவு செய்பவர்களாகவே செயற்படுகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதே இவர்களின் முழு எண்ணம். அதுவே சிங்கள அரசினதும், சிங்கள கட்சிகளினதும் அவாவாகும். எனவே இவ்விரு குழுக்கள் தொடர்பிலும் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற எந்தக் கட்சியினாலும் அதிகளவான ஆசனங்களைப் பெற முடியாது. வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பலம் பொருந்திய கட்சியாகும். இதை யாரும் மறுக்க முடியாது. மக்கள் தமது பலத்தை இம்முறை தேர்தலில் உறுதிபட வாக்குகள் மூலம் உலகறியச் செய்ய வேண்டும்.

உதிரிக் கட்சிகள் யாவும் ஒரு ஆசனத்தை பெறுவதற்காகவே தீவிரமாக செயற்படுகின்றனர். அவர்களால் ஒரு ஆசனத்தை பெற்று எதனையும் சாதிக்க முடியாது. அவ்வாறு ஒரு ஆசனத்தை அவர்கள் பெற்றுக் கொள்வார்களாயின் அரசு யாருடன் பேசுவது என்ற புதிய குழப்ப நிலைமைகள் தோன்றும்.

அவ்வாறான நிலைமைகள் தமிழ் மக்களின் நீண்டகால தீர்வுக்காக பல்வேறு முயற்சிகளையும்இ நடவடிக்கைகளையும் முன்னெடுத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை குறைப்பதாகவும்இ தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை ஒருமித்து சர்வதேசத்திற்கு எடுத்து சொல்வதிலும் பாதிப்பை ஏற்படுத்துவனவாக அமையும்.

எனவே தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் தமிழ்த் தேசிய பாதையில் இன்றும் தடமாறாது பயணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கு மாத்திரம் வாக்களித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். என்றார்.