ஏழுபேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – வீரமணி

ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பாக தண்டனை அனுபவித்து வரும் 7 கைதிகளின் விடுதலை  தொடர்பாக  தமிழக அரசு உரிய முடிவினை மேலும் தாமதிக்காமல் எடுக்க வேண்டும் என திராவிடக் கட்சித் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 29 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் கைதிகளான தற்போது ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட ஏடுபேரை விடுதலை செய்ய தமிழக அரசு முதல்வராக ஜெயலலிதா இருந்த போதே எடுத்த முடிவு ஏனோ இன்னமும் செயற்படுத்தப்படாமல் இத்தனை ஆண்டு காலம் அவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டு வருகிறது.

பேரறிவாளன் போன்றவர்களை விசாரித்த காவல்துறை அதிகாரி முதல், இறுதித் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் வரையில் அதில் வழக்கு விசாரணை, நீதி வழங்கியதில் ஏற்பட்ட கோணல் பற்றியும் வெளிப்படையாகவே கூறிவிட்ட பிறகும், உச்ச நீதிமன்றமும் அந்த ஏழுபேரை விடுதலை செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் தெளிவுபடுத்தி விட்ட பிறகும், தமிழ்நாடு அரசு பரிந்துரைத்து முடிவு எடுத்த கோப்பு, ஆளுநரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் இருப்பது பற்றி நேற்று (22) சென்னை உயர் நீதிமன்றம் தனது பகிரங்க அதிருப்தியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

இதன் பிறகும் அந்த ஏழு பேரின் விடுதலை தாமதிக்கப்படலாமா? முதல்வரின் அமைச்சர்களின் காதுகளில் இது விழவில்லையா? ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படியா? என்று தமிழக மக்கள் பேசுவது இந்த அம்மா அரசின் முதல்வரின்,  அமைச்சர்களின் காதுகளில் விழவில்லையா? அரசமைப்புச் சட்டப்படி தமிழக அமைச்சரவை முடிவெடுத்து, அந்தப் பரிந்துரை மாநில ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

இரண்டு ஆண்டுகளாக அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல், அக்கோப்புகள் தேக்க நிலையில் இருப்பது பற்றி உயர் நீதிமன்றம் கடுமையான அதிருப்தியை வெளிப்படத்தி நேற்று தனது கருத்தினை பதிய வைத்திருக்கிறது.

அரசின் பரிந்துரையை நிராகரிப்பதற்கோ, ஏற்றுக் கொள்வதற்கோ முழு அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. ஆனால், நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசமைப்பில் பதவியில் உள்ளவர்கள் மீதான நம்பிக்கை அடிப்படையில் தான் அவர்கள் முடிவெடுக்க வேண்டிய விவகாரங்களில் கால அவகாசம் நிர்ணயிக்கப்படவில்லை. என்பதையும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு சுட்டிக்காட்டியுள்ளது.

தாமதிக்ப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி அல்லவா? ஆளுநரும், தமிழக அரசும் இது பற்றிய சீரிய முடிவினை மேலும் தாமதிக்காமல் உடனடியாக எடுக்க வேண்டும். மனிதாபிமானத்தோடு, நீதி கிடைக்கச் செய்ய வேண்டியது முக்கியம் அவர்கள் கைக்கெட்டியது வாய்க்கு எட்ட வேண்டாமா? தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி அல்லவா? தமிழக அமைச்சரவை உடனே விரைந்து முடிவெடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.