கடற்தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டாம் -யாழில் போராட்டம்

கடற்தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு  அட்டைப்பண்ணைகள்   வேண்டுமென  வெள்ளிக்கிழமை (30) யாழ். கோட்டை பகுதியில் இருந்து யாழ் பஸ் தரிப்பு நிலையம் வரை பேரணி முன்னெடுக்கப்பட்டது.

பேரணிகள் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

கடற்தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அட்டைப்பண்ணைகள் பெரிதும் உதவுகின்றது. தற்போதைய  நாட்டின் பொருளாதார நெருக்கடியில் நாட்டுக்கும் மக்களுக்கும் அன்னிய செலாவணியை பெற்றுக் கொடுக்கும் ஒரு தொழிலாக அட்டைப் பண்ணை காணப்படுகின்றது.

சிலர் தமது குறுகிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக கடற்தொழில் மேற்கொள்ளாத சிலரும் அட்டைப்பண்ணையை விரும்பாத சிலரும்  எதிர்ப்புத்  தெரிவித்து வருகின்றனர்.

அட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு சங்கங்களின் விருப்பமும் பெறப்பட்டே உரிய திணைக்களங்கள் ஊடாக அளவீடு செய்யப்பட்டு அனுமதியுடன் பண்ணைகளை அமைத்துள்ளோம்.

அட்டைப் பண்ணைகளை வேண்டாம் என கூறுவோர் ஏன் வேண்டாம் என முதலில்  மீனவ சங்கங்களுடன் பேச வரட்டும் அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கட்டும்.

யாழில் அட்டப் பண்ணைகள் வேண்டுமென பலர் விண்ணப்பித்துள்ள நிலையில் துறைசார்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரைவாகப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆகவே ஒரு சிலரின் குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக மீனவ சமூகம் நன்மை அடைகின்ற அட்டைப் பண்ணைகளை ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர தடுக்கக் கூடாது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.