அனைத்துத் தேர்தல்களும் விகிதாசார முறைப்படி நடத்தப்பட வேண்டும்: தமிழ், முஸ்லிம் கட்சிகள் தீர்மானம்

விகிதாசார முறைப்படி நடத்தப்பட வேண்டும்
பலமான நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, 20ஆவது திருத்தத்தின் மூலம் மேலும் பலமாக்கப்பட்ட பின்னணியில், பாராளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி தேர்தல்கள், அனைத்து மாற்று அரசியல் கொள்கைகளை முன்னெடுக்கும் கட்சிகளினதும் மற்றும் அனைத்து சமூகக் குழுக்களினதும் பிரதிநிதித்துவங்களுக்கு வழிவகுக்கும் வகையில், முழுமையாக விகிதாசார முறைப்படி நடத்தப்பட வேண்டும் எனச் சிறுபான்மைக் கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்தனர். இதன்மூலம் பாராளுமன்றமும், மாகாண சபைகளும், உள்ளூராட்சி மன்றங்களும் தமது பன்மைத்தன்மை வாய்ந்த பிரதிநிதித்துவம் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை கண்காணித்து சமநிலைப்படுத்தும் நிறுவனங்களாக ஜனநாயகத்தின் பேரில் செயற்பட முடியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தமிழ்- முஸ்லிம் கட்சிகளான, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசு கட்சி, ரெலோ, புளொட்), தமிழ் முற்போக்கு கூட்டணி, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் நேற்று கொழும்பில் சந்தித்து தேர்தல் முறை தொடர்பில் ஒன்றுபட்டு செயல்படத் தீர்மானித்தன.

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் இதன்போது பொதுவான நிலைப்பாடு எட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிறிதரன், சித்தார்த்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், உதயகுமார், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சட்ட செயலாளர் ருஷ்டி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மதியூகராஜா, ஈ.பி.டி.பியின் சிரேஷ்ட உறுப்பினர் தவராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக எடுத்த தீர்மானம் ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டது. இதன்படி,

பாராளுமன்றத்தினதும், மாகாணசபைகளினதும், உள்ளூராட்சி மன்றங்களதும் கட்சி அங்கத்துவ எண்ணிக்கை தொகுப்பு, வாக்காளர்கள் கட்சிகளுக்கு அளித்த வாக்கு ஆணையை அதிகபட்சமாக பிரதிபலிக்க வேண்டும்.

வெற்றி பெறும் கட்சி, அளிக்கப்பட்ட வாக்குகளில் தாம் பெற்ற வாக்குகளின் விகிதாசாரத்தைவிட, அதிக விகிதாசார எண்ணிக்கையில் ஆசனங்களை எடுத்து கொள்வது தவிர்க்கப்படவேண்டும்.

வாக்கு விகிதாசாரமும், சபை அங்கத்தவர் எண்ணிக்கை விகிதாசாரமும், சாத்தியமானளவில் ஒன்றை ஒன்று ஒத்துப்போக வேண்டும். இந்நிலைமையை விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் மட்டுமே உறுதிப்படுத்த முடியும். உள்ளூராட்சி, மாகாண சபைகள், பாராளுமன்றம் ஆகிய மூன்று மட்ட தேர்தல்களுக்குமான சீர்திருத்தங்கள், தெரிவுக்குழுவினால் ஒரேவேளையில் தயார் செய்யப்பட்டு, ஒரே சட்டமூலத்தின் மூலம் அரசமைப்பு திருத்தமாக கொண்டு வரப்பட வேண்டும்.

ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தல்களை, முன்னுரிமை கொடுத்து, விகிதாசார முறையின் கீழ் நடத்த அரசாங்கம் உடனடியாக முன்வர வேண்டும்-என தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

ilakku Weekly Epaper 153 october 24 2021 Ad அனைத்துத் தேர்தல்களும் விகிதாசார முறைப்படி நடத்தப்பட வேண்டும்: தமிழ், முஸ்லிம் கட்சிகள் தீர்மானம்