மலையகத் தமிழர்களின் மனித உரிமைகள் பாதுகாப்புக்கு தேசியக் கொள்கை அவசியம்!

மலையகத் தமிழ் சமூகத்தின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் முறையானதொரு தேசிய கொள்கை கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கொழும்பில் புதன்கிழமை (17) விசேட தேசிய கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொழும்பு மந்தாரினா ஹோட்டலின நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மலையக மக்களின் தற்போதைய வாழ்வாதார, சமூக சவால்கள் குறித்து ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறியும் களப்பணி ஆய்வுகளின் விரிவான அறிக்கை மற்றும் அதற்கான பரிந்துரைகள் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டன.

இந்த கலந்துரையாடலின் பிரதான அம்சமாக, மலையகத் தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆணைக்குழுவின் சார்பில் விரிவான களப்பணி ஆய்வுகளை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களான சட்டத்தரணி பாலசந்திரன் கௌதமன் மற்றும் எஸ். பிரபாகரன் ஆகியோரால் விசேட விளக்கக்கட்சியொன்று முன்வைக்கப்பட்டது. கல்வி, தொழிலாளர் உரிமைகள், வறுமை ஒழிப்பு, மொழி உரிமைகள் மற்றும் அரச சேவைகள் ஆகிய ஐந்து பிரதான துறைகளை உள்ளடக்கி அவர்களால் இதன் போது பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.

மேலும் இதன் போது நிலம் மற்றும் ‘வீட்டுரிமை – மூலோபாயக் கொள்கை தலையீடுகள் மற்றும் அமலாக்க நடவடிக்கைகள்’ மற்றும் ‘அரசு சேவைகள், சுகாதாரம் மற்றும் பொருளாதார நல்வாழ்வுக்கான அணுகலை வலுப்படுத்துவதற்கான கொள்கை தலையீடுகள்’ ஆகிய தலைப்புக்களின் கீழான கலந்துரையாடல் அமர்வு ஆணைக்குழுவின் ஆணையாளர்களான நிமால் ஜி. புஞ்சிஹேவா மற்றும் கலாநிதி ஜெஹான் குணதிலக்க ஆகியோரின் நெறியாழ்கையில் இடம்பெற்றது.

இதேபோன்று ‘தொழிலாளர் உரிமைகள் மற்றும் வேலை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான கொள்கை மட்ட தலையீடுகள்’ மற்றும் ‘பெருந்தோட்ட சமூகங்களில் தரமான மற்றும் சமத்துவமான கல்வியை மேம்படுத்தல்: கொள்கை முன்னுரிமைகள் மற்றும் தலையீடுகள்’ என்ற தலைப்புக்களிலான கலந்துரையாடல் அமர்வு ஆணைக்குழுவின் ஏனைய ஆணையாளர்களான பேராசிரியர் பர்சானா ஹனீபா மற்றும் பேராசிரியர் டி. தனராஜ் நெறியாள்கையில் நடைபெற்றது.

கலந்துரையாடல்களின் போது அதில் கலந்து கொண்ட ஏனைய கல்வியியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், முன்னாள் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டோரின் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.