அவுஸ்திரேலியாவில் கொரோனா ஊரடங்கினால் திறன்வாய்ந்த துறைகளில் பணித்தேடும் அகதிகள் வேலையின்றி தவிக்கும் நிலை மேலும் அதிகரித்திருக்கிறது.
முகமது (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவ்வாறான அகதிகளில் ஒருவர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கினால் வேலைவாய்ப்பைப் பெறுவதில் கடும் இன்னல்களை சந்தித்து வருகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய கிழக்கு நாட்டிலிருந்து வெளியேறி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த முகமது ஒரு முதுகலை பட்டதாரி, திறன்வாய்ந்த பொறியாளர். ஆனால், அவுஸ்திரேலியாவில் பணி அனுபவம் இல்லாமையினாலும் அவுஸ்திரேலியாவில் அவரது பொறியியல் படிப்பு அங்கீகரிக்கப்படாமல் உள்ளதாலும் அவர் ஒரு வேலையைப் பெறுவதில் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளார்.
ஒரு தருணத்தில், புலம்பெயர்வு உதவி மையத்தின் உதவியுடன் ஒரு பொறியியல் நிறுவனத்தில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் கடந்த ஏப்ரல் 2020ல் ஏற்பட்ட கொரோனா முதல் அலை அவரது வாய்ப்பினைப் பறித்திருக்கிறது.
இதனால், முகமது தனது நிலையைக் குறைத்துக்கொண்ட தற்போது ஒரு சேமிப்புக் கிடங்கில் வேலையினைப் பெற்றிருக்கிறார். அவுஸ்திரேலியாவில் தொடரும் கொரோனா சூழலினால் நாடெங்கும் வேலைவாய்ப்புகள் குறைந்திருக்கிறது. இதன் காரணமாக, அகதிகள் வேலைகளைப் பெறுவது மேலும் சிக்கலுக்குரியதாக மாறியுள்ளது.