உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காகக் கொண்டுவரப்படவுள்ளதாகக் கூறப்படும் முன்மொழிவைக் கைவிடுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
இத்தகைய நடவடிக்கை நீதித்துறையின் சுதந்திரத்தைப் பலவீனப்படுத்தலாம், நீதிச் சேவையின் உள்ளகப் பதவி உயர்வுகளைப் பாதிக்கலாம் மற்றும் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கலாம் என்று அந்த சங்கம் எச்சரித்துள்ளது.
ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள 9 பக்கங்களைக் கொண்ட விரிவான கடிதத்திலேயே இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது அரசியலமைப்பின் மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், அது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய அரணாகும் என்று அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசியலமைப்பின்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 ஆகவும், உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வரம்புகள் நீதித்துறையின் தொடர்ச்சியைப் பேணவும், அதேநேரம் புதிய தகுதிவாய்ந்த நீதிபதிகள் உயர் நீதிமன்றங்களுக்குள் உள்வாங்கப்படுவதை உறுதி செய்யவும் திட்டமிட்டே வகுக்கப்பட்டவையாகும்.
தகுந்த அரசியலமைப்பு ரீதியான நியாயங்கள் இன்றி இந்த விதிகளில் மாற்றம் செய்ய முயல்வது, நீதித்துறையில் தன்னிச்சையாகத் தலையிடும் செயலாகவே பார்க்கப்படும் என்று குறித்த கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது பதவியிலுள்ள நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பதானது, உயர் நீதிமன்றங்களுக்குத் தங்களை உயர்த்திக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் நீதிச் சேவையில் அடிமட்டத்திலிருந்து உழைத்து வரும் ஏனைய நீதித்துறை அதிகாரிகளைப் பாரியளவில் பாதிக்கும் என்று சங்கம் வாதிட்டுள்ளது.



