கிழக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்திக் கொல்லப்பட்டமைக்கு சாட்சியமுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிப்பு

கிழக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் பிள்ளையானால் நடத்திவரப்பட்ட முகாமில் வைத்து கொல்லப்பட்டார் என்பதற்கான நேரில் கண்ட சாட்சியங்கள் தொடர்பிலும் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் அளித்த இரகசிய வாக்குமூலங்கள் தொடர்பிலும் சட்டமா அதிபர் திணைக்களம் வெளிப்படுத்தியுள்ளது.

இதன்படி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என்ற சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

தனது கைது மற்றும் தடுப்புக்காவல் சட்டவிரோதமானது எனத் தெரிவித்து பிள்ளையானால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி இந்த விடயங்களை வெளிப்படுத்தினார்.

அங்கு சட்டத்தரணி உதய கம்மன்பிலவுடன் மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா தமது சேவை பெறுநரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சுமார் 19 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர் காணாமல் போன சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்ய சட்ட ஏற்பாடுகள் இல்லை என்றும் அவர் வாதிட்டுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் பிள்ளையானின் முகாமில் வைத்து கொல்லப்பட்டார் என்பதற்கான நேரில் கண்ட சாட்சியங்களும், கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் அளித்த இரகசிய வாக்குமூலங்களும் இருப்பதாகவும் அரச சட்டவாதி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

எனவே, விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் சட்டபூர்வமாக தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளதாகவும், அதற்காக வாக்குமூலங்களின் பிரதிகளை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க வேண்டுமென சட்டம் இல்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

இரு தரப்பினரின் சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த நீதியரசர்கள் குழாம், சம்பந்தப்பட்ட சாட்சியாளர்களின் வாக்குமூலங்களின் பிரதிகளை இரகசிய உறையில் இட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது.