உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைகள் ஏழாண்டு காலத் தூக்கத்தின் பின்னர் விழித்து வருவது போல் தெரிவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“மைத்திரியின் அறியாமை, கோட்டாபயவின் தனித்தேவை மற்றும் ரணிலின் அதிகார இருப்புத்தேவை போன்றவற்றால் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கான உண்மைகள் கண்டறியப்படவில்லை” என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பிள்ளையானின் தனிப்பட்ட செயலாளராகவும் சுரேஷ் சாலேயின் நம்பிக்கையாளராகவும் இருந்த அஸாத் மௌலானா, நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் சனல்-4 இற்கு (Channel 4) உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் மற்றும் பல விடயங்கள் தொடர்பாகவும் தகவல்களை அளித்துள்ளார்.
அதில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான பல விடயங்கள் பேசப்பட்டிருந்தன.
அவை தொடர்பாக அக்கால ஜனாதிபதிகளான கோட்டாபய மற்றும் ரணில் ஆகியோர் அக்கறை காட்டவில்லை.
அவர்கள் தமது அதிகார இருப்பின் மீதுதான் கூடிய கவனம் செலுத்தினர் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
இந்த விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பெயரையும் ஊடகங்கள் உச்சரிப்பதைக் காண முடிகின்றது.
அந்த வகையில் ஆட்சி மாற்றத்தையும் அதிகார இருக்கையையும் பெற்றுக்கொள்வதற்கான தாக்குதலாகவே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் அமைந்திருப்பதாக நம்பப்படுகிறது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.



