ஈரான் வெளியுறவு அமைச்சர்-ரஷ்ய அதிபர் புதின் இடையில் சந்திப்பு

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு மாஸ்கோ நகரில் அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்திக்கவுள்ளார்.

ரஷ்யாவுக்கான ஈரானியத் தூதர் காசெம் ஜலாலியை மேற்கோள் காட்டி, ஈரானிய செய்தி நிறுவனம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இச்சந்திப்பு இன்று, அதாவது திங்கட்கிழமையன்று நடைபெறும் என்று காசெம் ஜலாலி மேலும் தெரிவித்தார். அண்மைக்கால நிலவரங்கள், போர்நிறுத்தம் மற்றும் அது தொடர்பான நிகழ்வுகள் குறித்து ரஷ்ய அதிகாரிகளுடன் அராக்சி பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பேச்சுவார்த்தைக்காக அராக்சி மாஸ்கோ வரவுள்ளார் என்பதை ரஷ்ய வெளியுறவு அமைச்சகமும் ஞாயிற்றுக்கிழமையன்று உறுதிப்படுத்தியது.

இதற்கு முன்னதாக, அப்பாஸ் அராக்சி பாகிஸ்தான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் அண்மைக்கால நிலவரங்கள் குறித்து விவாதித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.