திருச்சி சிறப்பு முகாமில் இருந்து 4 தமிழர்களையும் விடுவிக்க வேண்டும்- முதலமைச்சருக்கு சீமான் கடிதம்

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து முருகன் தவிர மற்ற 3 பேரையும் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை | ilakkiyainfo

நால்வரும் ஈழத்தமிழர்கள் என்பதாலேயே, அவர்களை சிறப்பு முகாமில் அடைப்பதும், இலங்கைக்கு நாடுகடத்த முயல்வதும் உகந்த நடவடிக்கையில்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதலமைச்சருக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டு காலத்திற்கும் மேலாக கொடுஞ்சிறை தண்டனைக்கு ஆளாகி, நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு விடுதலை பெற்றுள்ள ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் ஆகியோர் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள செய்தியையும், அவர்களது விடுதலையின் மகத்துவத்தையும் தாங்கள் நன்றாக அறிவீர்கள். 6 பேரும் விடுதலை பெற்று விட்டார்கள் எனும் மகிழ்ச்சிகரமான செய்தியை உள்வாங்கி முடிப்பதற்கு உள்ளாகவே, அவர்களில் நால்வர் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட செய்தியானது பெரும் அதிர்ச்சியையும், மனவேதனையையும் தந்தது.

வெளியுலகத்திற்கும், சட்டத்தின் பார்வையில் அவர்கள் 4 பேரும் விடுதலை பெற்றதாகக் கொண்டாலும், சிறப்பு முகாம் என்பது அவர்களுக்கு மற்றுமொரு கொடுஞ்சிறையாகவே இருக்கும். தங்களை சிறப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கக்கோரி ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் பட்டினிப் போராட்டத்தை முன்னெடுத்து, அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்பதும் மிகுந்த கவலை அளிக்கிறது. அவர்களின் உடல் நலத்திற்கு எவ்வித தீங்கும் நேராமல் பாதுகாக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் பொறுப்பும், கடமையுமாகும்.

அதுமட்டுமின்றி, தமிழக அரசு அளித்த நீண்ட சிறை விடுப்பில் நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் உள்ளிட்டோர் வெளிவந்த நாட்களில் சட்டம் ஒழுங்கை மிகவும் மதித்து, மிக அமைதியான, கண்ணியமான வாழ்வினை மேற்கொண்டனர் என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே, முதலமைச்சர், சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தங்கள் உறவுகளிடம் செல்ல விரும்புகிற பட்சத்தில், அவர்களை விரும்பும் நாடுகளுக்கு அனுப்பி வைக்க உரிய சட்ட நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.