3.5 மில்லியன் பாடசாலை மாணவர்கள் உணவின்றி பாதிப்பு-ஜோசப் ஸ்டாலின்

3.5 மில்லியன் பாடசாலை மாணவர்கள் உணவின்றி பாடசாலை செல்கின்றனர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுசெயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையை கருத்தில் கொள்ளும்போது 4.5 மில்லியன் பாடசாலை மாணவர்களில் 3.5 மில்லியன் மாணவர்களிற்கு உணவு வழங்கவேண்டிய நிலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அவர் மாணவர்களிற்கு உணவை வழங்குவதற்கான திட்டத்தை கல்வி அமைச்சு உட்பட அரசாங்கம் முன்னெடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களின் உணவு தேவை தொடர்பான விடயத்தில் தற்போதுமிக மோசமான நிலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ள ஜோசப் ஸ்டாலின் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உணவு வழங்குவதற்கான வசதியில்லாத நிலையில் உள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் ஒரு மில்லியன் மாணவர்களுக்கு மாத்திரம் உணவை வழங்கியுள்ளது இந்த திட்டத்தையும் அரசாங்கம் உரிய முறையில் தற்போது முன்னெடுப்பதில்லை இந்த நிலையில் 3.5 மில்லியன் மாணவர்களிற்கு உணவை வழங்கும் திட்டம் அவசியம் என ஜோசப்ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சில பாடசாலைகள் மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளன பெற்றோரும் ஆசிரியரும் இணைந்து உணவு தயாரிக்கின்றனர் அல்லது பாடசாலைக்கு அருகில் உள்ள வீடுகளில் இருந்து உணவை பெற்று மாணவர்களிற்கு வழங்குகின்றனர் இவை அனைத்தும் தற்காலிக நடவடிக்கைகளே எனவும் தெரிவித்துள்ள அவர் அரசாங்கமே நிரந்தர தீர்வை வழங்கவேண்டும் – மாணவர்களிற்கு உணவை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை அதிகரிக்கவேண்டும் தற்போது ஒரு சாப்பாட்டிற்கு 60 ரூபாய் வழங்கப்படுகின்றது அது போதுமானதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.