அம்பாறையில் ஒரே நாளில் 277 பேருக்கு தொற்று; கல்முனையில் இருவர் மரணம்

corona update அம்பாறையில் ஒரே நாளில் 277 பேருக்கு தொற்று; கல்முனையில் இருவர் மரணம்இலங்கையில் கோவிட் வந்தகாலம் தொடக்கம் இதுவரை ஒரேநாளில் 277 அதியுயர் தொற்றுக்களின் எண்ணிக்கையை அம்பாறை மாவட்டம் நேற்று முன்தினம் (9) பதிவு செய்திருக்கின்றது.

அம்பாறை மாவட்டத்தினுள் வரும் அம்பாறை பிராந்தியத்தில் 171பேரும் கல்முனைப் பிராந்தியத்தில் 106பேரும் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். கூடவே கல்முனைப் பிராந்தியத்தில் இரு மரணங்களும் சம்பவித்திருக்கின்றன.

இதுவரை காலமும் ஒரேநாளில் தொற்றுகளின் எண்ணிக்கை 100ஐத் தாண்டியது என்றால் அது நேற்று முன்தினமே. சுருக்கமாகக் கூறினால் நிலைமை மோசமாகிறது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் கண.சுகுணன் தெரிவித்தார்.

இதற்கு அடிப்படைக் காரணம் எவ்வளவுதான நாம் அர்ப்பணிப்புடன் விழிப்புணர்வை செய்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், மக்கள் கவனயீனமாக இருப்பது கவலையைத் தருகிறது. இன்றைய நிலைக்கு காரணம் மக்களின் அலட்சியமான போக்கே தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை எனவும் சலித்துக் கொண்டார்.

அவர் மேலும் கூறுகையில், கல்முனை சுகாதார சேவைகள் பிராந்தியத்தில் 09.08.2021 நேற்று 24 மணி நேர அறிக்கையின்படி 106 கோவிட் தொற்றாளர்களும் இரண்டு கோவிட் மரணங்களும் பதிவாகியுள்ளன. அக்கரைப்பற்று ,காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிராந்தியத்தில் இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ன.

கல்முனை சுகாதார சேவைகள் பிராந்தியத்தில் தொற்றாளார்களின் விபரங்கள் இவ்வாறு அமைகின்றது. நிந்தவூர் 24, கல்முனை வடக்கு 18, அட்டாளைச்சேனை 06, அக்கரைப்பற்று 03, ஆலையைடிவேம்பு 17, இறக்காமம் 01, கல்முனை தெற்கு 02, காரைதீவு 12, நாவிதன்வெளி 12, பொத்துவில் 06, சாய்ந்தமருது 04, சம்மாந்துறை 04, திருக்கோவில் 05 ஆகும்.

ilakku-weekly-epaper-141-august-01-2021