COVID தொற்று காரணமாக தமது வேலை நாட்கள் குறைக்கப்படுவதால் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பல வருடங்களாக போராடியதன் விளைவாக 1000 ரூபா நாளாந்த சம்பளம் நிர்ணயிக்கப்பட்டாலும் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் தொழிலாளர்கள், 1000 ரூபா சம்பளத்திற்கு 20 கிலோகிராம் கொழுந்தை பறிக்க தாம் நிர்பந்திக்கப்படுவதாக பொகவந்தலாவை தோட்ட மக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.
20 கிலோகிராம் கொழுந்தினை பறிக்க முடியாத தற்போதைய சூழலில், வேலை நாட்கள் குறைக்கப்படுவதாகவும் தொழிலாளர்கள் கவலை வௌியிட்டுள்ளனர்.
கடந்த முதலாம் திகதி வேலை வழங்கப்பட்ட நிலையில், எதிர்வரும் 7 ஆம் திகதியே மீண்டும் வேலை வழங்கப்படும் என தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதாகவும் ஏப்ரல் , மே மாதங்களில் 7 தொடக்கம் 12 நாட்கள் மட்டும் சம்பளம் கிடைக்கப் பெற்றதென்றும் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தொடரும் பயணக் கட்டுப்பாடு மற்றும் முடக்கல் நிலைமை காரணமாக முற்கூட்டியே பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலைக்கும் இந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
சம்பள நிர்ணய சபையூடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டாலும் இதன் உண்மையான பயனை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக மக்களாக தாம் உள்ளதாக தோட்ட தொழிலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.