வில்பத்து காடழிப்பு சட்டவிரோதமானது- ரிஷாட்டுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு

வில்பத்து சரணாலயத்தை அண்மித்த கல்லாறு பகுதியில் 1000 ஏக்கர் காட்டினை அழித்தமை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று   தீர்ப்பளித்துள்ளது.

மேலும் முழுப் பகுதியையும் மறுகட்டமைக்க தனிப்பட்ட நிதியைப் பயன்படுத்தவும் ரிஷாட் பதியுதீனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரிஷாட் பதியூதீன், அமைச்சராக இருந்த காலப் பகுதியில், வில்பத்து சரணாலயத்தை அண்மித்த கல்லாறு பகுதியில் 1000 ஏக்கர் காட்டினை அழித்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை மீள்குடியமர்த்தும் நோக்கில் நடவடிக்கை எடுத்தமைக்கு எதிராக சுற்றாடல் நீதிக்கான நிலையம்  வழக்கை தாக்கல் செய்திருந்தது.

குறித்த வழக்கின் பிரதிவாதிகளாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்,  மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் வன பாதுகாப்பு திணைக்களம் உள்ளிட்ட தரப்பினர் பெயரிடப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கில் வில்பத்து சரணாலயத்தின் கல்லாறு வனப்பகுதியில் 2388 ஏக்கரை அழித்ததன் ஊடாக பாரிய சூழல் அழிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், வில்பத்து காடழிப்பு சட்டவிரோதமானது என்றும் வில்பத்து சரணாலய வனப் பகுதியை மீண்டும் செழிப்புறச் செய்வதற்கான நடவடிக்கைகளை ரிஷாட் பதியூதீன், தனது சொந்த நிதியில் செய்ய வேண்டும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது.