வட, கிழக்கில் காணி அபகரிப்பால் சமூகங்களிடையே பதற்றநிலைமை – பிரிட்டனின் பொதுநலவாய பணிமனை

19 வட, கிழக்கில் காணி அபகரிப்பால் சமூகங்களிடையே பதற்றநிலைமை - பிரிட்டனின் பொதுநலவாய பணிமனைஇலங்கையின் வடக்கு, கிழக்கில் காணி அபகரிப்புகள் அதிகரித்து வருகின்றன. இவை, மத வழிபாட்டு தலங்களை இலக்கு வைத்தவையாக உள்ளன. இவ்வாறான செயல்பாடுகள் சமூகங்களிடையே பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளன என்று பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி பணிமனை தெரிவித்துள்ளது.

அத்துடன், வடக்கு, கிழக்கில் வாழும் சமூகங்கள் படைத் தரப்பினரின் தொடர் கண்காணிப்பு, ஒடுக்குமுறைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றன என்று அந்தப் பணிமனை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக நிலவரம் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

32 நாடுகளின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக நிலவரம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் இலங்கை தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,

“இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்ந்தும் கரிசனைக்கு உரியதாகவே உள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்வதை முன்னிறுத்திய பல்வேறு முயற்சிகளுக்கு மத்தியிலும் அந்தச் சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதுடன் கருத்து வெளிப்பாடு மற்றும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் ஏனைய சட்டங்களும் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.

இதேபோன்று அமைதியான முறையில் நடத்தப்பட்ட போராட்டங்கள் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் கடுமையான முறையில் அடக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன. நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் சமூகங்கள் படைத் தரப்பினரின் தொடர் கண்காணிப்புக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றன.

அதுமாத்திரமன்றி அப்பகுதிகளில் கரிசனைக்குரிய மட்டத்தில் காணி அபகரிப்புகள் அதிகரித்து வருவதுடன், சிலவேளைகளில் இவை மத வழிபாட்டுத் தலங்களை இலக்கு வைத்தவையாக உள்ளன. இவ்வாறான செயல்பாடுகள் சமூகங்களுக்கு இடையில் பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளன.

உண்மை மற்றும் நல்லிணக்க விவகாரத்தில் முன்னேற்றத்தை அடைவதற்கான கடப்பாட்டை இலங்கை கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் எவையும் 2023 ஜூன் மாதமளவில் வெளியிடப்பட்டிருக்கவில்லை.

இலங்கை தொடர்பில் ஐ. நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் நாம் சமர்ப்பித்த அறிக்கையில் யுத்தத்துக்கும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்குக்கும் வழிவகுத்த அடிப்படைக் காரணிகளைக் கண்டறிந்து
களைவதற்குரிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் வெளிப்படைத்தன்மை – பொறுப்புக்
கூறல் – அனைவரையும் உள்ளடக்கிய தன்மை என்பன பேணப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தோம்” என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.