வடகொரிய மக்களுக்கு நற்செய்தி சொன்ன அதிபர் கிம் ஜாங் உன்

கொரிய போரை முடிவிற்கு கொண்டு வர பேச்சுவார்த்தை மூலம் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு 67ஆண்டுகள் நிறைவு விழா வடகொரியாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அவர்கள், இந்த பூமியில் இனி போர் நடக்காது என்று கூறி அந்நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், வடகொரியா எதிரி நாட்டிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே அணு ஆயுதங்களை தயாரிக்கிறது. வடகொரியாவின் நம்பகமான திறன் மிக்க அணு ஆயுதங்களால் உலகில் இனி போர் நடக்காத சூழல் உருவாகியுள்ளது. நமது நாட்டின் பாதுகாப்பும் எதிர்காலமும் எப்போதும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை என உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இவ்வாறு பேசியிருப்பது பல நாடுகளின் கவனத்தையும் திருப்பியுள்ளது.