லடாக் எல்லையில் சீன இராணுவத்திற்கே அதிக இழப்பு -ரஷ்ய செய்தி நிறுவனம் தகவல்

லடாக் எல்லையில், கடந்த ஜூன் மாதம் சீன இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய இராணுவத்தினர்  கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் சீன இராணுவத்தினர் 45 பேர் பலியாகியுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் கூறியுள்ளது.

கடந்த ஜூன் மாதம், லடாக் எல்லையில்  சீன இராணுவம் அத்துமீறிய போது, இந்திய இராணுவம் கொடுத்த பதில் தாக்குதலில் 43க்கும் அதிகமான சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை மறுத்த சீனா, இப்போது வரை,  தமது தரப்பில்  கொல்லப்பட்ட சீன வீரர்களின் எண்ணிக்கையை தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், ரஷ்ய செய்தி நிறுவனமான, ‘டாஸ்’  வெளியிட்ட தகவலில், லடாக்கில், சீனா – இந்தியா இடையே நடந்த மோதலில், 45க்கும் அதிகமான சீன இராணுவத்தினர் உயிரிழந்தனர் என்றும் அதில் இந்திய தரப்பில் 20 இராணுவத்தினர் பலியாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த விவகாரத்தில், தங்கள் இழப்பு குறித்து சீனா  எந்த தகவலையும் வெளியிடவில்லை என்றும் இந்த சம்பவத்தில் சீனாவுக்குத்தான் அதிக இழப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.