ஐ.நா. பொதுச் செயலரின் அறிக்கை ஒருதலைப்பட்சமானது -இந்தியா

ஐ.நா. பொதுச் செயலரின் அறிக்கை, ஐ.எஸ்., பயங்கரவாத செயல்களை மட்டும் ஒருதலைப்பட்சமாக ஆராய்ந்துள்ளது எனக் குற்றம்சுமத்தியுள்ள இந்தியா, பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகளையும் ஆராய்ந்து அறிக்கை வெளியிட வேண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா., பாதுகாப்பு குழு கூட்டத்தில், ஈராக்கின், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பால், சர்வதேச அமைதிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்த, 12வது ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.

ஐ.நா., பொதுச் செயலர்,அன்டோனியோ குட்டரஸ் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், ஐ.எஸ்., அமைப்பின் புதியதளபதி, ஷிஹப் அல் முஹாஜிர், இந்தியா, ஆப்கன், வங்கதேசம், பாக்கிஸ்தான், இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளில் பயங்கரவாத செயல்களுக்கு பொறுப்பேற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கனில், ஐ.எஸ்., அமைப்பைச் சேர்ந்த, 2,200 பேர், தலைநகர் காபூல் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடக் கூடும் எனவும், அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இந்த அறிக்கை மீதான விவாதத்தில், ஐ.நா.,வுக்கான இந்திய துாதர், டி.எஸ்.திருமூர்த்தி கருத்துக் கூறுகையில்,

ஐ.நா., பொதுச் செயலரின் அறிக்கை, ஐ.எஸ்., பயங்கரவாத செயல்களை மட்டும் ஒருதலைப்பட்சமாக ஆராய்ந்துள்ளது.

“ஆப்கனில், ஹக்கானி பயங்கரவாத அமைப்புடன், ஐ.எஸ்.,சுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக அறிக்கை கூறுகிறது. ஹக்கானிக்கு நெருக்கமான, பாக்கிஸ்தான், உளவு அமைப்பு, அல் குவைதா, தெஹ்ரிக் – இ – தலிபான் போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதை நாம் கண்டு கொள்ளாமல் இருக்கக் கூடாது.

அல் குவைதா, ஹக்கானி, ஜெய்ஷ் – இ – முகமது, லஷ்கர் – இ – தொய்பா ஆகியவை தொடர்ந்து செழித்து வளர்ந்து வருகின்றன. இவை, ஆப்கன் – பாக்கிஸ்தான், பிராந்தியத்தில் பாதுகாப்பாக இருந்தபடி, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றன.

பாக்கிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் – இ – முகமது உள்ளிட்ட பல அமைப்புகள், பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டு கின்றன.

இத்தகைய அமைப்புகளின் செயல்பாடுகளை ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டால் தான், தெற்காசிய பிராந்தியத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்த முழுமையான பரிமாணத்தை புரிந்து கொள்ள முடியும்” என்றார்.