ராஜபக்ஷக்களுடன் இனி அரசியல் பயணம் இல்லை – உதய கம்மன்பில திட்டவட்டம்

ராஜபக்ஷக்களுடன் இனி அரசியல் பயணம் கிடையாது என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

“கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கி கசப்பான பாடத்தை கற்றுக்கொண்டுள்ளோம். எனவே, இனியும் தனிநபர்களை மையப்படுத்தியதாக எமது அரசியல் பயணம் அமையாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் எமது கூட்டணி அறிவிக்கப்படும். 2015 இல் மஹிந்த சூறாவளி எனும் நடவடிக்கையை ஆரம்பித்தோம். அது தனிநபரை மையப்படுத்திய பயணம். இனியும் அவ்வாறு செயற்படத் தயாரில்லை. தனிநபர்களை மையப்படுத்திய அரசியல் பயணத்தால் இரு கசப்பான பாடங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன.

எமது எதிரணி மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்குக் கொண்டு வந்து கசப்பான பாடத்தையும், கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்குக் கொண்டு வந்து கசப்பான பாடத்தையும் கற்றுக்கொண்டுள்ளோம். தர்மத்தின் வழியில் வேலைத்திட்டம் மற்றும் கொள்கைகளையே நாம் தலைமைத்துவமாகக் கருதிச் செயற்படுவோம். ராஜபக்ஷக்களுடன் இனி அரசியல் பயணம் கிடையாது” என்றும் அவா் தெரிவித்தாா்.