யாழ்.மாநகர கண்காணிப்பு அணியினரை  பாதுகாக்க வேண்டும் : மனோ கணேசன்

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அழைக்கப்பட்டுள்ள யாழ்.மேயரால் நியமிக்கப்பட்ட ஐவரையும் பயங்கரவாத அடையாளத்துக்குள் சிக்காது பாதுகாக்கும் பொறுப்பு யாழ்.மாநகர சபைக்கு உள்ளது. என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ  தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகரைச் சுத்தமாக வைத்திருப்பதற்கும் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையைக் கையாள்வதற்கும் என அமைக்கப்பட்ட யாழ். மாநகர காவல் படையின் பணியாளர்கள் ஐவரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், கொழும்பிலுள்ள நாலாம் மாடியில் அமைந்துள்ள பயங்காரவாத விசாரணைப் பிரிவினரின் அலுவலகத்துக்கு எதிர்வரும் 11ஆம் திகதி காலை ஒன்பது மணிக்குச் சமுகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் மனோ கணேசன் தனது முகநூல் பதிவில்,

“பயங்கரவாத விசாரணை பிரிவு, சர்ச்சைக்குரிய யாழ் மாநகர சபையின் தூய்மை கண்காணிப்பு அணியினர் ஐவரையும் விசாரணைக்கு அழைத்துள்ளது.

அப்பாவிகளான இவர்களை, ‘பயங்கரவாத’ அடையாளத்துக்குள் சிக்காமல் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு, யாழ் மாநகர சபைக்கு இருக்கின்றது.

கட்சி பேதங்களுக்கு அப்பால், அனைத்துக் கட்சி யாழ். நாடாளுமன்ற உறுப்பினர்களினாலும், அரசியல், சட்டரீதியான கூட்டு முயற்சிகள், இது தொடர்பில் அவசியம்.

முக்கியமாக, யாழ். மாவட்ட அரசின் பங்காளி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

அது அப்படியிருக்க, இந்தப் பணியாளர்களின் அதிகாரபூர்வ பணிப்பெயர் என்ன?

‘யாழ் மாநகர காவல் படையா’ அல்லது ‘தூய்மை கண்காணிப்பு அணியா’? ஊடகங்களுக்கு இது பற்றி தெளிவை மாநகரசபை தர வேண்டும்” என  தெரிவித்துள்ளார்.