யாழ். பல்கலையைச் சுற்றி இராணுவத்தினர் குவிப்பு – நினைவேந்தலைத் தடுப்பதற்கு முயற்சி

முள்ளிவாய்க்கால் நினை வேந்தல் நிகழ்வுகளை யாழ். பல்கலைக்கழத்தினுள் மாணவர்கள் இன்று ஏற்பாடு செய்வார்கள் எனப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன எனக் கூறி, பல்கலைக்கழகத்தைச் சுற்றி படையினர் நேற்று குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகின்றது.

நாட்டில் எழுந்துள்ள கொரோனாப் பெருந்தொற்று நிலைமைகளை அடுத்து, இம்மாதம் தொடக்கத்தில் இருந்து, நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழகங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டமையை அடுத்து, யாழ்.பல்கலைக்கழகத்திலும் அத்தியாவசியப் பரீட்சை செயற்பாடுகள், ஆய்வு நடவடிக்கைகள் தவிர மாணவர்கள் உள்நுழைவு தடுக்கப்பட்டிருந்தது.

ஆயினும், நிர்வாக நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. எனினும், பல்கலைக்கழகத்தினுள் மாணவர்கள் சிலர் இன்று நினைவேந்தல் நிகழ்வைச் செய்வதற்குத் தயாராகியுள்ளனர் என்று எமக்குப் புலனாய்வுத் தகவல் கிடைத்திருப்பதால், பல்கலைக்கழகம் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது எனவும், பல்கலைக்கழகத்தைச் சுற்றி இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தீவிர கண்காணிப்பை மீறிச் செயற்படுவோர் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸ் மேலும்கூறினர்.