முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அமைச்சரவையில் ஆராய்வு

கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை, தலைமன்னாரில் அடக்கம் செய்யும் திட்டம் தொடர்பாக அமைச்சரவை ஆராய்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதற்கு, முஸ்லிம் சமூகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

அதேபோன்று முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கை நியாயமானது என்றதன் அடிப்படையில் பல சமூக அமைப்புக்களும் அவர்களுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.

அத்துடன் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு, ஐ.நா.அபிவிருத்தி திட்டத்தின் பிரதிநிதியுமான ஹனா சிங்கர்  இந்த விவகாரம் குறித்து தனது கரிசனையை வெளியிட்டு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  கொழும்பில் உள்ள முஸ்லிம் மையவாடியில் கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டவேளை, பெரும்பாலான அமைச்சர்கள் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

 அதே நேரம், “கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யவேண்டுமா? அல்லது அடக்கம் செய்ய வேண்டுமா? என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கான அதிகாரம் அமைச்சரவைக்கு இல்லை” என்றும் இது தொடர்பான முடிவை சுகாதார அதிகாரிகளே எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும்  தெரிவித்திருந்தார்.

ஆனால் குறித்த நடவடிக்கையினால்,  இன பதட்டம் ஏற்படலாம் என பல அமைச்சர்கள்  எச்சரித்திருந்தனர்.

இதனை தொடர்ந்தே தலைமன்னாரில் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லீம்களின் உடல்களை புதைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக ஆராய்ந்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார நிபுணர்கள் குழுவொன்றிடம் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் குறிப்பிட்ட குழுவினர் பரிந்துரை செய்தால் மாத்திரமே அரசாங்கம் தலைமன்னாரை பயன்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.