முருகன் வேலூர் மருத்துவமனையில் அனுமதி

தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த முருகனின் உடல் சோர்வடைந்தமையால் அவர் வேலூர் அடுக்கம்பறை அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 29 வருடங்களைக் கடந்தும் ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் சிறையில் இருந்து வரும் முருகனுக்கு,  அங்கு வழங்கப்பட்ட சலுகைகளை சிறைத்துறை நிர்வாகம் இரத்துச் செய்திருந்தது.

இதனால் மனமுடைந்த முருகன், கடந்த மாதம் 23ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றார். சிறையில் அவருக்கு வழங்கப்படும்உணவுகளைத் தவிர்த்து வரும் முருகன், பழங்கள் தண்ணீரை மட்டும் எடுத்துக் கொள்கின்றார். இதனால் போதிய ஊட்டச்சத்து இல்லாததாலும், தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதாலும் முருகனின் உடல் நிலை பாதிக்கப்பட்டது.

சிறைத்துறை மருத்துவர்கள் பரிசோதித்து, அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக முருகனுக்கு சிறையில் 4 குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. அதே நேரம் முருகனின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவிற்குக் கொண்டுவர சிறைத்துறையினர் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

இதேவேளை நேற்று(15)இரவு அவரின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, சிறைத்துறை மருத்துவர்கள் மற்றும் வேலூர் மருத்துவப்பணியிகள் இணை இயக்குநர் யஸ்மின் ஆகியோர் முருகனுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர். இவர்களின் ஆலோசனையை அடுத்து முருகன் வேலூர் அடுக்கம்பாறை அரச மரத்தவமனைக்கு நேற்று இரவு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் குளுக்கோஸ் மட்டும் போதாது கட்டாயமாக உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர். அரசு மருத்துவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்காததால் முருகன் மீண்டும் சிறைக்குத் திரும்பினார்.

இந்நிலையில், சிறைக்குத் திரும்பிய சிலமணி நேரங்களில் முருகனின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டது. இதனால் இன்று(16) அதிகாலை முருகன் மீண்டும் வேலூர் அடுக்கம்பாறை அரச மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு முருகனின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

அத்துடன் முருகன் நடத்திவரும் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவிற்குக் கொண்டுவர சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். வேலூர் அடுக்கம்பாறை அரச மருத்துவமனையில் முருகன் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.