மருதனார்மடம் கொத்தணியின் எண்ணிக்கை 68 ஆக அதிகரிப்பு – நேற்று 10 பேருக்கு கொரோனா

யாழ். போதனா வைத்தியசாலை, யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். சங்கானை பொதுச் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் 100 வியாபாரிகளிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையிலேயே 8 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த சங்கானையில் 4 பேரும் பண்டத்தரிப்பு, மானிப்பாய், வடலியடைப்பைச் சேர்ந்த தலா ஒருவரும் உடுவிலைச் சேர்ந்த ஒருவரும் அடங்குகின்றனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்து பீட ஆய்வுகூடத்தில் நேற்று 100 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவற்றில் 8 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய 92 பேருக்கு தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், மருதனார்மடம் பொதுச்சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியில் மேலும் 2 பேருக்கு கோவிட் – 19 நோய்த் தொற்று உள்ளமை நேற்று மாலை உறுதிப்படுத்தப்பட்டது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் கூறினார்.

மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த ஏழாலையைச் சேர்ந்த 2 பேருக்கே இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணி மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 68ஆக அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையிலேயே இந்த முடிவு வெளியாகியுள்ளது.