நளினியின் மகளுக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்பதால் திருமணம் நடைபெறவில்லை

லண்டனில் உள்ள நளினியின் மகளுக்கு தற்போது திருமணத்தில் விருப்பம் இல்லாத காரணத்தினாலேயே அவர் இந்தியாவிற்கு வரவில்லை என தெரியவந்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் பெண்கள் சிறையில் இருந்த நளினி தனது மகள் திருமண ஏற்பாட்டிற்காக ஒருமாதம் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் அவரின் மகள் ஹரித்ரா வருவதில் தாமதமான நிலையில் அவருக்கு மேலும் மூன்று வாரங்கள் பிணை நீடிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மேலும் ஒரு மாதம் பிணைநீடிப்புக் கோரி நளினி மனு தாக்கல் செய்த போதும் அது நிராகரிக்கப்பட்டது. அவரின் பிணை இன்றுடன் (15.09) முடிவடைகின்றது. இதனையடுத்து நளினியை வேலூர் சிறைக்கு பொலிசார் அழைத்துச் சென்றனர்.

ஹரித்ராவிற்கு ஈழத் தமிழர் ஒருவரைத் தான் மாப்பிள்ளையாகத் தேர்ந்தெடுக்க நளினி விரும்புகின்றார் எனவும் மாப்பிள்ளை லண்டனில் வசிப்பவராகக்கூட இருக்கலாம் என்றும் நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி முன்னர் கூறியிருந்தார்.

ஆனால் நளினி இவ்வளவு நாள் வெளியில் இருந்தும் ஹரித்ரா ஏன் இந்தியா வரவில்லை என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அவருக்கு திருமணத்தில் தற்போது விருப்பமில்லை என்பதே அந்தக் காரணமாகும்.

பெற்றோர் முழுமையாக விடுதலையான பின்னரே, திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றார். இது குறித்து அவர் நளினியிடம் கூறியதற்கு நளினி எதிர்ப்புத் தெரிவித்ததுடன் உடனே இந்தியா வருமாறும் சொல்லியிருக்கின்றார். ஆனால் ஹரித்ரா லண்டனிலேயே இருக்கின்றார் எனத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி கூறுகையில், வெளிநாடுகளில் இருப்பவர்களிடம் தான் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கின்றது. இந்தியா வர அவர்களில் பலருக்கு விசா கிடைக்கவில்லை.

இத்தோடு இலங்கையில் உள்ள நளினியின் மாமியாரும் வரவில்லை. நளினி-முருகன் விடுதலையாகி வருவதில் காலதாமதமாகும். அதுவரை எதற்கு காத்திருக்க வேண்டும் என மகளுக்கு திருமணம் முடிக்க நளினி ஆசைப்பட்டார் என அவரின் வழக்கறிஞர் கூறினார்.