தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அரசுக்கு ஒத்துழைக்கவேண்டும் – வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை

“தமிழ் மக்களின் பிரச்னைக்கான தீர்வினை வழங்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்க தமிழ்மக்கள் பிரதிநிதிகளும் முன்வரவேண்டும்” என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-

“நான் ஒட்டுமொத்த புலம்பெயர் அமைப்பினருக்கும் எதிரானவன் கிடையாது. நீங்கள் இங்கு தினமும் தனி இராச்சியம் பற்றித்தானே பேசுகின்றீர்கள். சமஷ்டி தொடர்பாக பேசுவதில் பிரச்னையில்லை. அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாகத்தான் நாமும் பேசிக் கொண்டிருக்கிறோம். வடக்கு- கிழக்கு மக்கள், இந்த நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள் இல்லை என்று கூறுகின்றார்கள். 1983 ஆம் ஆண்டில் எனது தந்தையின் தமிழ் நண்பர்களும்தான் கொல்லப்பட்டார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் செய்த விசாரணையில், 6 இலட்சத்து 50 பேர் தாங்கள் நேசித்தவர்களை இழந்துள்ளார்கள் என தெரியவந்துள்ளது. வடக்கில் மட்டும் 5 இலட்சத்துக்கும் அதிகமானோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு ஒரு நிவாரணம் வேண்டும் என்பதுதான் எமதும் கோரிக்கையாகும். இது உண்மையான தீர்வாக அமையாவிட்டாலும், நாம் இதனை ஆரம்பிக்க வேண்டும்.
இந்த எண்ணக்கருவை எம்மால் கைவிட முடியாது. இதுதான் என்னுடைய நிலைப்பாடு. இதற்கான ஆலோசனைகளை வழங்க தமிழ் பிரதிநிதிகள் முன்வரவேண்டும்” என்றார்.