‘தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்’ என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். ‘தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்வதன் ஊடாகவே தமிழ் தேசியத்தையும் இருப்பையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்’ என்றும் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
‘இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் சம்பந்தமாகவும்இ அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் ஆராய்ந்தோம்’.
‘ஏனைய தமிழ் தேசிய கட்சிகளுடன் பேசி அவர்களுடன் ஒரு நிலைப்பாட்டிற்கு வந்து தற்போதைய அரசியல் சூழலுக்கமைய நாம் ஒரு தேசிய இனமாக தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என தீர்மானித்துள்ளோம்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘அதனால் எமது தனித்துவத்தை பேணும் வகையில் ஏனைய தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறேன்’ என்றும் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
‘தேசிய கட்சியில் உள்ள தமிழர்கள் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பார்கள். அவர்களால் தனித்து பேச முடியாது. அதனால் தமிழ் தேசிய கட்சிகளை பலப்படுத்த வேண்டும்’.அத்துடன் ‘தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியல்களில் வெற்றிடங்கள் உள்ளன. அவற்றில்இ ஏனைய கட்சியினரை இணைத்து போட்டியிடவும் தயார்’ என்று அந்த கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
‘உள்ளூராட்சி சபைகளை தமிழ் தேசிய கட்சியாக நாம் ஒன்றிணைந்து கைப்பற்ற வேன்டும். வடக்கு கிழக்கு மக்களாகிய நாம் எம் இனம் சார்ந்து நம் இருப்பை தக்க வைக்க வேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



