சாந்தன் நாடு திரும்புவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை – வெளிவிவகார அமைச்சா் அலி சப்ரி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் நீண்டகாலம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாந்தன் எனப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராசா மீண்டும் நாடு திரும்புவதற்கு எந்தவித தடையும் இல்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இரு நாடுகளிலும் இருந்து சாந்தன் இலங்கை திரும்புவதற்கான கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில், அவர் நாடு திரும்புவதில் எந்தவித தடையும் இல்லை என்பதுடன், இலங்கை அரசு எவ்வித ஆட்சேபனையையும் தெரிவிக்கப்போவதில்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கூறினார்.

எனவே, எந்தச் சந்தர்ப்பத்திலும் சாந்தனுக்கு நாடு திரும்ப முடியும் என்றும் அலி சப்ரி மேலும் குறிப்பிட்டார்.