இலங்கையின் சக்தி வலு சுயாதீனத்தை இந்தியா ஆக்கிரமிக்கும் – எச்சரிக்கிறாா் விமல் வீரவன்ஸ

இலங்கையின் சக்தி வலுவின் சுயாதீனத்தை வெகுவிரைவில் இந்தியா ஆக்கிரமிக்கும். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணும் நோக்கம் ஜனாதிபதிக்கு கிடையாது. நெருக்கடிகளை தீவிரத்தபடுத்தி மேற்குலகத்தை மகிழ்விக்க முயற்சிக்கிறார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கடுவலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

“பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய மாத்திரம் பொறுப்புக் கூற வேண்டும் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொருளாதார நெருக்கடி என்ற சிசு கோட்டாவின் ஆட்சியில் பிறந்ததால் நெருக்கடிகள் தீவிரமடைந்தன.அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய முறையாக செயற்பட்டிருந்தால் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்திருக்காது.

1991 ஆம் ஆண்டு இந்தியா பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்க்கொண்டது.ஒரு வாரத்துக்கு தேவையான வெளிநாட்டு கையிருப்பு மாத்திரமே இந்தியாவின் வசமிருந்தது. அவ்வாறான நிலையில் அப்போதைய இந்திய பிரதமர் பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங்கை நாட்டுக்கு வரவழைத்து அவரை நிதியமைச்சராக்கினார். பொருளாதாரத்தை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள், அரசியலை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று இந்திய பிரதமர் உறுதியளித்ததை தொடர்ந்து மன்மோகன் சிங் இந்திய பொருளாதாரத்தை பலப்படுத்தினார்.

விழுந்த இடத்தில் இருந்து எழுந்து இன்று இந்தியா பொருளாதார முன்னேற்றத்தில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தேசிய உற்பத்திகளை வலுப்படுத்தி அமுல்படுத்திய செயற்திட்டங்களால் இந்தியா இன்று வலுவான நிலையில் உள்ளது. பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்த சூழ்நிலையில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய பொருளாதாரம் தொடர்பில் அடிப்படை தகைமைகூட இல்லாத பஸில் ராஜபக்ஷவை நிதியமைச்சராக நியமித்தார்.

பொருளாதார நெருக்கடி தொடர்பில் அமைச்சரவையில் எழுப்பிய கேள்விகளுக்கு பஸில் ராஜபக்ஷ பதிலளிக்கவில்லை. சகோதரர் என்பதால் கோட்டாபயவும் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டார். இறுதியில் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்காகவே ராஜபக்ஷர்கள் உட்பட பொதுஜன பெரமுனர் ரணில் விக்கிமசிங்கவை ஜனாதிபதியாக்கினார்கள். பொருளாதார மீட்சி என்று குறிப்பிட்டுக் கொண்டு நாட்டை
அதலபாதாளத்துக்குள் தள்ளும் செயற்பாடுகள் மாத்திரமே முன் னெடுக்கப்படுகின்றன.

இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. மன்னார் காற்றாலையின் பெரும்பாலான பங்கு இந்தியாவின் அதானி நிறுவனத்திடம் உள்ளது. இலங்கையின் சக்தி வலுவின் சுயாதீனத்தை இந்தியா வெகுவிரைவில் ஆக்கிரமிக்கும்” என்றும் விமல் வீரவன்ச தெரிவித்தாா்.