குற்றவாளிகளை தண்டிக்காத நாடு இலங்கை என்பது மீண்டும் நிருபணம்! -பா.அரியநேத்திரன்

மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவரை குறுகிய காலத்தில் ஜனாதிபதி அவர்கள் விடுதலை செய்ததன் மூலம் குற்றவாளிகளை தண்டிக்காத நாடு என்ற சிறுமையை இலங்கை பெற்றுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மிருசுவில் படுகொலைகளில், குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பாக அவர்மேலும் கருத்துக்கூறுகையில்

பல தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என தொடர்ச்சியாக பல அழுத்தங்களையும் போராட்டங்களையும் தமிழ்தேசியகூட்டமைப்பும் தமிழ்மக்களும் முன்எடுத்த போதும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் இலங்கையை ஆட்சிசெய்த எந்த அரசாங்கமாக இருந்தாலும் அதற்கான வாய்புகளை வழங்கவில்லை,

ஆனால் இவ்வாறான வழக்குகள் பல முன்னெடுக்கப்படாத நிலையிலும் வேறு பலர் மேன்முறையீட்டில் விடுவிக்கப்பட்ட போதும் இந்த ஒருவர் தான் அவற்றுக்கு விதிவிலக்காக இருந்தவர். இலங்கையில் இவ்வாறான குற்றங்களைச் செய்தவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதை இது உறுதி செய்கிறது.

ற்போது கொரோனா வைரஷ் பீதியில் முழு உலகமும் எமது மக்களும் கவனம் திரும்பி உள்ள இவ்வேளையில் சத்தமில்லாமல் தமது எண்ணங்களை நிறைவேற்றி தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் கசப்புணர்வு ஏற்படும்படியாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.

ஜனாதிபதி அவர்கள் தண்டனை கைதிகள் யாருக்கும் பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரம் அவருக்கு உள்ளதுஅந்த அதிகாரத்தை இனரீதியான பாகுபாடு காட்டாமல் கடந்த பல வருடங்களாக தமது வாழ்க்கையை தொலைத்து சிறைகளில் வாழும் தமிழ் அரசியல் கைதிகளையும் இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கி தமது நல்லெண்ணத்தை காட்டவேண்டும் எனவும் மேலும் கூறினார்.