குருந்துமலையில் விகாரை அமைக்கத் திட்டம்? நிறுத்துமாறு சட்டத்தரணி சுகாஸ் மனு

முல்லைத்தீவு குருந்துமலையில் விகாரை கட்டுமானப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன எனக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சட்டத் தரணி கனகரட்ணம் சுகாஷ், நீதிமன்றில் முன்வைத்த விண்ணப்பம் ஆராய்வதற்காக இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.

முல்லைத்தீவு தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தொல்பொருள் திணைக்கள மாவட்ட அதிகாரி ஆகியோரை இன்று மன்றில் முன்னிலையாகுமாறு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முல்லைத்தீவு குருந்துமலையில் விகாரை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிக்கு எதிராக முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அந்த வழக்கை மன் றில் அழைக்குமாறு கிராம மக்கள் சார்பில் சட்டத்தரணி க.சுகாஷ் இன்று நகர்த்தல் பத்திரம் அணைத்து விண்ணப்பம் செய்தார்.

அதனடிப்படையில் வழக்கு திறந்த மன்றில் அழைக்கப்பட்டது. குருந்துமலையில் வைரவர் சூலம் முறித்து அகற்றப்பட்டு அங்கு விகாரை அமைக்கும் கட்டுமானங்களை இன்று ஆரம்பிக்க உள்ளதாக எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதனால் அந்தக் கட்டுமானப் பணிகளை இடை நிறுத்த கட்டளையிடப்பட வேண்டும் என்று சட்டத்தரணி க. சுகாஷ், மன்றுரைத்தார்.

வழக்கின் எதிர்த்தரப்பினரான முல்லைத்தீவு பொலிஸார், தொல்பொருள் திணைக்களத்தினர் நேற்று மன்றில் முன்னிலையாகாததால் வழக்கை நாளை வரை மன்று ஒத்திவைத்தது. அத்துடன், தொல்பொருள் திணைக்களக்க அதிகாரி, முல்லைத்தீவு தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகிய இருவரையும் இன்று நீதிமன்றில் முற்படுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.