காஷ்மீர் விவகாரத்தில் ஐநா நிறைவேற்றிய தீர்மானத்தின் படி பொது வாக்கெடுப்பு, நடத்தப்பட்டால் காஷ்மீர் மக்கள் தங்களது விருப்பப்படி, பாகிஸ்தானுடன் இணையலாம் அல்லது சுதந்திர நாடாக இருக்கலாம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
1947ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் மூன்று முறை போர் மூண்டிருக்கிறது. அதில் இரு முறை காஷ்மீருக்காகப் போர் நடந்தது. இரு நாடுகளுமே காஷ்மீரை முழுமையாக உரிமை கோருகிறார்கள். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி (லைன் ஆஃப் கன்ட்ரோல்) என்றழைக்கப்படும் எல்லைப் பகுதிகளால் பிரிக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே இருநாடுகளும் நிர்வகித்து வருகின்றன.
கடந்த 1948ஆம் ஆண்டு ஐ.நாவின் பாதுகாப்புச் சபை, காஷ்மீர் மக்கள் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணையவதை முடிவு செய்ய பொது மக்கள் வாக்கெடுப்பை நடத்துமாறு தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் காஷ்மீர் தனி நாடாக இருக்கலாம் என்கிற வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
எனினும், காஷ்மீரில் (பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் உட்பட) இருந்து பாகிஸ்தான் தன் துருப்புகளைப் பின்வாங்கும் வரை, இந்த பொது வாக்கெடுப்பை நடத்த முடியாது என இந்தியா மறுப்புத் தெரிவித்து வந்தது.
இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு, இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை உறுதிசெய்யும் அரசமைப்பின் சட்டப்பிரிவு 360-ஐ இந்திய அரசு நீக்கியது. இதன் மூலம், காஷ்மீருக்கு இருந்து வந்த தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்பட்டு, அது இந்தியாவின் மத்திய ஆட்சிப் பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், (பிப்ரவரி 5, வெள்ளிக்கிழமை) பாகிஸ்தானின் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் இருக்கும் கோட்லி எனும் இடத்தில் ‘காஷ்மீர் ஒற்றுமை நாள் கூட்டம்’ நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், “நீங்கள் காஷ்மீரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாக்களித்தால், பாகிஸ்தானோடு இணைந்து இருக்கலாம் அல்லது விரும்பினால் தனியாக சுதந்திர நாடாக இருக்கும் உரிமையை பாகிஸ்தான் வழங்கும்” எனக் கூறியுள்ளார்.
மேலும் “காஷ்மீர் மக்களுக்கும், பாகிஸ்தானுக்கும் வழங்கிய உத்தரவாதத்தை ஐநா சபைக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இந்தோனீசியா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கிய உத்தரவாதத்தை ஐநா நிறைவேற்றியுள்ளது.”
“சுதந்திர காஷ்மீருக்கு ஆதரவாக பாகிஸ்தான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகமும் நிற்கிறது. காஷ்மீர் மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளை என்னால் உணர முடிகிறது. நீங்கள் விரும்பியதை பெறும் வரை, நான் செல்லும் இடங்களில் எல்லாம் உங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
On #KashmirSolidarityDay, I want to reiterate that Pakistan stands united & resolute with the Kashmiris in their legitimate struggle for self-determination, which has been reaffirmed by the international community in numerous UNSC resolutions.
— Imran Khan (@ImranKhanPTI) February 5, 2021
இதுதொடர்பாக பல ட்விட்டர் பதிவுகளை செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், “காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை என்னும் குறிக்கோள் வெகு தொலைவில் இல்லை என்று நான் கூற விரும்புகிறேன். உங்கள் நியாயமான உரிமைகளை நீங்கள் அடையும் வரை பாகிஸ்தான் உங்களுடன் துணை நிற்கும்.
காஷ்மீர் பிரச்சனைக்கு நியாயமான தீர்வைக் கோருவதில் இந்தியா நேர்மையை வெளிப்படுத்தினால், ஐநா சபையின் தீர்மானங்களின்படி, அமைதிக்காக இரண்டு படிகளை முன்னெடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், அமைதிக்கான எங்கள் விருப்பத்தை யாரும் பலவீனம் என்று தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். மாறாக, ஒரு வலிமைமிக்க நாடாக நாங்கள் காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அமைதியான முறையில் நிறைவேற்றவே நாங்கள் விரும்புகிறோம்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
1991ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானின் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் இருக்கும் கோட்லி எனும் இடத்தில் ‘காஷ்மீர் ஒற்றுமை நாள் கூட்டம்’ கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இலங்கையில் உள்ள இஸ்லாமியர்களாலும் இந்த ஒற்றுமை நாள் நினைவு கூறப்பட்டது. மேலும் காஷ்மீரில் நடைபெறும் வன்முறைகள் குறித்து ஐ.நாவிடம் மனு ஒன்றும் னையளிக்கப்பட்டுள்ளது.