கன்னியா வெந்நீரூற்றில் மீண்டும் புத்த விகாரை

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிரதேசத்தில் மீண்டும் புத்த விகாரை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியை தொல்பொருள் திணைக்களம் மேற்கொள்வதாக தென்கைலை ஆதீனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆதீன முதல்வர் கருத்து தெரிவிக்கையில், கடந்த திங்கட்கிழமை முதல் கன்னியா பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த பிரதேசத்தில் அதனை அகற்றி புத்த விகாரை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும். அது தொடர்பாக அவர்களிடம் கேட்டதற்கு திருமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கமைவாகவே விகாரை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டனர்.

திருமலையில் நடத்தப்பட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தானும் பங்குபற்றியதாகவும், அதில் விகாரை அமைப்பதற்கான எந்தவித அனுமதியும் எவராலும் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இதுவரை நடத்தப்பட்ட எந்தக் கூட்டத்திலும் இவ்வாறு ஒரு முடிவு எடுக்கப்படவில்லை எனவும் மேலும் தெரிவித்தார்.