ஒன்றாகவே இந்த உலகிற்கு வந்து கோவிட்டால் ஒன்றாகவே விடைபெற்ற சகோதரிகள்

நாங்கள் ஒன்றாகவே இந்த உலகிற்கு வந்திருக்கின்றோம் அதேபோன்று ஒன்றாகவே தான் போவோம் என கூறிவந்த இரட்டைச் சகோதரிகள் கதியும் ஏமாவும் அவ்வாறே கோவிட்-19 வைரஸ் தொற்றிக்கு உள்ளாகி ஒன்றாகவே விடைபெற்றுச் சென்றுள்ளனர்.

கடந்த செவ்வாய் கதியும் இன்று வெள்ளி காலை எமாவும் தமது 37ஆவது வயதில் இங்கிலாந்தின் சவுதாம்டன் வைத்தியசாலையில் மரணத்தைத் தழுவிக் கொண்டனர். சிறு வயது முதலே மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்களாக தாமே வைத்தியர்களாகவும் தாதிகளாகவும் மாறி தமது பொம்மைகளை பராமரிப்பார்கள் என்கிறார் இவர்களின் சகோதரி சோ.

அதேபோன்று பெரியவர்களானதும் இருவரும் தாதிகளாகவே பயின்று பணியாற்றினர். ஒரு தாதி என்ற நிலையைக் கடந்து இருவரும் தமது பராமரிப்பில் உள்ள நோயாளிகளிடம் நடந்து கொள்ளும் விதத்தை பேரன்புடன் நினைவு கூருகின்றனர் இவர்களது சக தாதிகள் மட்டுமல்ல இவர்களின் பராமரிப்பில் இருந்த நோயாளிகளும் அவர்கள் தம் குடும்பமும் தான்.

இருவரும் சவுதாம்டன் சிறுவர் வைத்தியசாலையிலேயே பணியாற்றியுள்ளனர். எமா 2013 வரை மட்டுமே பணியாற்றியுள்ளார். இருவரும் உடலநலக்குறைவு கொண்டவர்களாக சமீக காலத்தில் இருந்துள்ளமை கோவிட்-19 அதிக தாக்கத்தை அவர்களில் ஏற்ப்படுத்துவதற்கு காரணமாக அமைந்துவிட்டது.

ஒன்றாகவே பிறந்து ஒன்றாகவே வசித்து தற்போது ஒன்றாகவே விடைபெற்றுவிட்டனர் இந்த இணைபிரியாக இரட்டையர். இவர்களுடன் பிரித்தானியாவில் கோவிட்-19 தாக்கத்திற்கு உள்ளாகி இறந்த தாதிகளின் எண்ணிக்கை 50 எட்டியுள்ளது.

நன்றி: நேரு