உனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்!

முயன்றால் முடியாதது என்று எதுவுமே இல்லை என்று கூறுவார்கள். முடியாதது என்னும் சொல்லில்கூட முடி என்னும் சொல் உள்ளது. இவ் உலகில் முயற்சியைவிட வேறு எதுவும் சிறந்த இடத்தைப் பெற முடியாது. நம்மால் இது நிச்சயமாக செய்ய முடியாது என்று கூறும் காரியத்தைக்கூட மீண்டும் மீண்டும் விடா முயற்சியுடன் செய்தால், ஒரு நாள் கட்டாயமாக வெற்றி கிடைக்கும். அது மேலும் நமக்கு தன்நம்பிக்கையை ஊட்டும்.

நாம் தோல்வியை வெல்ல முயற்சி என்னும் ஆயுதத்தை ஏந்தி, தோல்வியுடன் போராட வேண்டும். நமது செயலில் முயற்சி இருந்தால், தோல்வி நம்மிடம் வந்து சேராது. நாம் முயற்சியில் வெற்றிபெற நம்மிடம் மூன்று விடயங்கள் காணப்பட வேண்டும். அதாவது நமது நோக்கம் மிகச் சரியானதாக காணப்பட வேண்டும். மற்றும் நாம் எடுக்கும் முயற்சி தொடர்ச்சியாக இருக்க வேண்டும். அது மட்டுமல்ல, அனைவரும் எடுக்கும் வழியில் முயலாமல் எமது அறிவு, சிந்தனை என்பன தனித்துவமாகக் காணப்பட வேண்டும். இம் மூன்றும் நம் முயற்சியை வெற்றிப் பாதையில் செல்ல வழிவகுக்கும்.

unnamed 2 உனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்!

நாம் எக்காரியத்தை ஆரம்பிக்கும் போதும் சற்று மலைப்பாகத்தான் இருக்கும். அதாவது குழந்தைகள் நடக்க ஆரம்பிக்க முன் விழுந்து,  எழுந்து தான் நடை பயிலுகின்றனர். கீழே விழுந்து விட்டோமே என்று நடை பயிலாமல் விட்டுவிடுவதில்லை. வெற்றி பெறுவதற்கு முடிவில்லா முயற்சியும், அதீத நம்பிக்கையும் தேவையானதாகும். நன்றாக “உழைத்திரு உனது குறிக்கோளை நீ நிச்சயம் அடைவாய்” என்று விவேகானந்தர் கூறுகின்றார். அது மட்டுமல்ல, “தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்” என்று திருவள்ளுவரின் இரு வரிகளிற்கு ரோஜர் பேனிஸ்டர் வாழ்க்கையானார். அதாவது நாம் மேற்கொள்ளும் செயல் சிறப்பினைத் தரும்என்று உணரும் போது முயற்சி ஆர்ட்டீசியன் ஊற்றுகள் போல் ஊற்றெடுக்கும். விடாமுயற்சி மட்டும் இல்லாவிட்டால், பல சாதனைகள் நிகழ்ந்திருக்க மாட்டாது.

முயற்சி என்பது தொடங்கி விட்டு முடிவு செய்வதல்ல. இலக்குத் தெரியாமல் முயற்சிப்பது தான் கடினம். இலக்கினை மிகச் சரியாக கணித்துவிட்டு, முயற்சித்தால் எல்லாம் எளிதாக வெற்றி பெற்றுத் தரும். உயர உயர குதித்துப் பார்த்து தன்னால் திராட்சைப் பழத்தை உண்ண முடியவில்லை என்று எடுத்த முயற்சியைக் கைவிட்டு, இந்தப் பழம் புளிக்கும் என்று பாதியிலே கைவிடுவது முயற்சியல்ல. தன் குடுவையிலுள்ள நீரைப் பருக முடியவில்லை என்றதும் முயற்சியினால் கற்களை குடுவையில் இட்டு நீரை மேலேறச் செய்து பருகிய காக்கையின் வெற்றிதான் முயற்சி. அதாவது ஒரு செயலினை செய்யத் தொடங்கி, அது முடியாமல் போனதும் கைவிடுவதல்ல முயற்சி. அச் செயலை வெற்றியடையச் செய்ய நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் தான் வெற்றி.

துன்பம், வேதனை, சங்கடம், மற்றும் விருந்தோம்பல் அனைத்திற்கும் வரம்புகள் உள்ளன. எனினும் கடுமையான முயற்சி ஒன்றிற்கு மாத்திரமே வரம்புகள் காணப்படாது. சூறாவளி பறவைகளின் கூடுகளை சேதமாக்கி அழித்து விடும். எனினும் பறவைகள் தங்களது முயற்சியால் மீண்டும் கூடுகளை அமைத்துக் கொள்ளும். அதேபோல இரவை காரிருள் சூழ்ந்தாலும் தாரகைகளின் ஒளி இருளோடு போராடி ஒளிரும். அதன் இறுதியில் விடியலும் கண் திறக்கும். ஏனெனில், எல்லைகள் இன்றி செய்தாலே வெற்றி நமக்குக் கிடைத்துவிடும். அதற்கான முயற்சி வரம்பற்றது.

நம்மால் முடிந்தவரை செய்வது முயற்சியல்ல. நாம் நினைக்கும் காரியங்களை முடிக்கும் வரை முயற்சி செய்வதே முயற்சியாகும். ஒருவன் கடலிலே குதித்து முத்து இல்லை என எடுக்காமல் வந்தால், கடலில் முத்து இல்லை என அர்த்தமல்ல, அவன் எடுத்த முயற்சி போதாது. அக்காரியத்தை நிறைவேற்ற அவன் பல முயற்சிகள் எடுக்க வேண்டும். நாம் இளமைக்கு வேலைக்காரனாக இருந்து விடா முயற்சிகளை மேற்கொண்டால், முதுமைக்கு எஜமானாக வாழலாம். முயற்சி இல்லாமல் எதுவுமே இல்லை. முயற்சி தான் சிறப்பான செயற்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.

விடா முயற்சி என்பது இலக்கைக் காதலிப்பதாகும். எத்தனை தடைகள் வந்தாலும், அவற்றைத் தாண்டி இலக்கை அடைய முயற்சி செய்ய வேண்டும். விடா முயற்சி உயர்ந்த இடத்தை அடைய உதவி செய்யும். அதேபோல் உயர்ந்த இடத்திலிருந்து கீழே விழாமல் நம்மைப் பாதுகாக்கும். வெற்றி பெறுவதற்கான ஆயுதம் விடாமுயற்சி என்பதைத் தோல்வி நமக்குக் கற்றுத் தருகின்றது. நாம் தோல்வி அடைந்த போது செய்த தவறுகளை எல்லாம் நீக்கி விட்டு, பொறுமையுடன் புதிதாய் முயற்சி செய்யும் போது வெற்றி எமக்கு அருகில் வந்து விடும்.

உலகில் யாரும் தெய்வீகக் குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளை பொறுத்துத் தான் முன்னேற்றமோ, வீழ்ச்சியோ ஏற்படுகின்றது என அம்பேத்கர் கூறியுள்ளார். நாம் இலக்கைத் திட்டமிட்டு நம்மால் திரட்ட முடிந்த அளவில் வளங்களைப் பயன்படுத்தி (பணம், நேரம் முதலியவற்றை) திரட்டி முயற்சி செய்திருப்போம். நம்முடைய முழு உழைப்பையும் கொடுத்து வெற்றி நிச்சயம் என்று நினைத்திருப்போம். வெற்றி என்னும் சிகரத்தில் ஏறும் போது, தோல்வி என்னும் பள்ளத்தாக்கில் வாழ்க்கை நம்மைத் தள்ளிவிடும்.

அப்போது நம் மனதில் நம்பிக்கையின் இடத்தை பயம் எடுத்துக் கொள்ளும் எங்கும் இருள் சூழ்ந்திருக்கும். அப்போது நாம் இருட்டை சபித்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு முயற்சி என்னும் மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும். முயற்சியே கனவுகளை நிச்சயமாக்கும். முயற்சிக்கும் அனைவரும் வெற்றி பெறுவதில்லை. வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசம் முயற்சி ஆகும். ஒவ்வொரு மனிதனும் இறந்து போவது உண்மைதான். என்றாலும், அவனோடு அவன் செய்த காரியங்களும், முயற்சிகளும் இறந்து போய் விடுவதில்லை. எவன் ஒருவன் கைவிடுகின்றானோ அப்போது அவனது திறமையும் போய் விடுகின்றது.

டாக்டர் அப்துல்கலாம் விமானியாக வேண்டும் என கனவு கண்டார். எனினும் அவர் அதில் தோல்வியே கண்டார். அப்படியிருந்தும், தோல்வியே வெற்றிக்கு முதல்படி என்ற கருத்திற்கமைய விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற உயர்ந்த இலக்கில் வெற்றி கண்டு, உயர்ந்தார். பிறந்த குழந்தை தவழ முயற்சிக்கின்றது. பின்னர் நடக்க முயற்சி செய்கின்றது. இப்படி ஒவ்வொரு முயற்சியும் தான் அக் குழந்தையை வளர வைக்கின்றது. இவ்வாறு முயற்சியே திருவினையாக்குகின்றது. எமக்கு எதிர்பார்ப்பின்றி கிடைக்கும் எதுவும் இவ்வுலகில் நிலைத்து நிற்காது. நாம் முயற்சி செய்யாமல் வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் நம் இலக்கை தோல்வியில் நிறுத்தி விடும்.

download உனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்!

ஏதாவது தன்னுடைய வாழ்வில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால், அவர்கள் தமது வாழ்நாளில் புதிதாக ஒரு முயற்சியும் செய்து பார்த்தது இல்லை எனப் பொருள்படும் என்று ஆல்பரட் ஜன்ஸ்டைன் கூறுகின்றார். அது மட்டுமல்ல ஆயிரத்திற்கு மேற்பட்ட புதிய கண்டுபிடிப்பிற்கு சொந்தக்காரனான தோமஸ் அல்வா எடிசன் ஆயிரம் முறை புதுப்புது வழிகளில் முயற்சித்தும் மின்சார விளக்கைக் கண்டு பிடிக்க முடியாமல் போனதை பிறர் கிண்டல் செய்த போது, ஆயிரம் வழிகளில் மின்சார விளக்கு எரியாது என்பதை கண்டுபிடித்து முயற்சிக்கு உதாரணமாக அமைந்தார். சாதனையாளர்கள் முதல் முயற்சியில் வெற்றி பெற்று விடுவதில்லை. நம்மைச் சுற்றி அறிவாளிகள், திறமையுள்ளவர்கள், பணக்காரர்கள் தோன்றி இருப்பார்கள். ஆனால் விடா முயற்சி உள்ளவர்கள் வென்றிருப்பார்கள்.

தோல்விகள் கதவை மூடும்போது, தொடர்ந்து விடா முயற்சியுடன் கதவைத் தட்டித் திறப்பது தான் வெற்றிக்கான சாவி ஆகும். நமக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கென்று தனியாக ஒரு நேரம் எதுவும் இல்லை. விடா முயற்சியோடு செயற்படுகின்றவர்களிடம் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும். வெற்றி பெற்றவர்கள் வரிசையில் இணைய விடா முயற்சியை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

உ.டனன்சியா

2019 வணிகப்பிரிவு