இலங்கைக்கு அனுப்ப கோரி மின் கோபுரத்தில் ஏறி அகதி போராட்டம்

திருமங்கலத்தை அடுத்துள்ள உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமினை சேர்ந்தவர் தங்கவேலு(51). கடந்த 2018ல் ஏற்பட்ட தகராறில் இவர் மீது  பொலிஸ் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் தங்கவேலு, தான் இலங்கைக்கு செல்ல விரும்புவதாக கூறி 6 மாதத்திற்கு முன்பு   விருப்பமனு கொடுத்துள்ளார். வழக்கு இருப்பதால் வழக்கினை முடித்த பின்பு தான்  இலங்கைக்கு அனுப்ப முடியும் என அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இதன் காரணமாக இவரது பதிவு நீக்கம் செய்யப்பட்டது. இதனால் தங்கவேலுவால் இலங்கைக்கு செல்ல இயலவில்லை.

இந்நிலையில்,நேற்று முன்தினம் முகாமில் தனது வீட்டின் அருகேயிருந்த உயரழுத்த மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார் தங்கவேலு. தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி பொலிசார், கியூ பிரிவு பொலிசார், வருவாய்த் துறையினர் போராட்டம் நடத்திய தங்கவேலுவிடம் நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே இறங்கினர்.

சம்பவம் குறித்து ஆஸ்டின்பட்டி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கைக்கு அனுப்ப வலியுறுத்தி அகதி இவ்வாறு போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.