இந்திய குடியுரிமை அல்லது இரட்டைக் குடியுரிமை – இலங்கை அகதிகள் மனு

ஓசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி அணையில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள இலங்கை அகதிகள் தங்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது இரட்டைக் குடியுரிமை வழங்கக் கோரி கிருஸ்ணகிரி கலெக்டர் பிரபாகரிடம் அவரின் அலுவலகத்தில் மனு ஒன்றை கையளித்துள்ளனர்.

“நாம் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரின் காரணமாக 1990ஆம் ஆண்டு இந்தியா வந்தோம். தற்போது ஓசூர் தாலுகா கெலவரப்பள்ளி அணை இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருகின்றோம். இங்கு சுமார் 143 குடும்பத்தைச் சேர்ந்த 522பேர் வசித்து வருகின்றோம்.

இதில் 200 பேர்வரை கூலி வேலைக்குச் சென்று வருகின்றோம். அத்துடன் 80 மாணவர்கள் பள்ளிக்கும், 15 மாணவர்கள் கல்லூரிக்கும் சென்று வருகின்றனர். 15பேர் கல்லூரி படிப்பை முடித்துள்ளனர்.

மேலும் நாங்கள் தமிழக அரசு வழங்கும் உதவிகளுடன் 29 வருடங்களாக தமிழகத்தை புர்வீகமாகக் கொண்டு, தமிழக மக்களுடன் வாழ்ந்து வருகின்றோம்.

தமிழ் நாட்டில் அகதி முகாமில் நாங்கள் கால்நூற்றாண்டுக்கு மேல் இருந்து வருகின்றோம். இந்த மண்ணில் வாழ்க்கையை தொடருவதற்கு ஏற்ற முறையில் இந்தியக் குடியுரிமை, அல்லது இரட்டைக் குடியுரிமை வழங்க தாங்கள் ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.