இந்தியாவுக்கு நன்றி கூறுகின்றது இலங்கை

அனைத்துலக நாணய நிதியத்தின் நிதி உதவி கிடைத்தது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எமக்கு ஆபத்தில் உதவிய இந்தியாவுக்கு நாம் மிகப்பெரும் நன்றிகளை கூற கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார் இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொறகொட.

நேற்று (1) இந்திய ஊடகம் ஒன்றிடம் பேசும்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அனைத்துலக நாணயநிதியம் 2.9 பில்லியன் டொலர்களை 48 மாதகால அடிப்படையில் உதவ முன்வந்துள்ளது. இது முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் முதல்படி.

தற்போது ஏனைய நாடுகளின் உதவிகளை எதிர்பார்த்துள்ளோம். இந்தியா தான் ஒரே ஒரு நண்பன், எமக்கு நிபந்தனைகள் இன்றி உதவியது. இலங்கையை மீட்டதில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.