இத்தாலியில் கொரோனா தொற்றுக்கு 827 பலி;அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடல்

இத்தாலியில்கொரோனா வைரஸ்   பாதிப்பு காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்களைத் தவிர்த்து பிற பொருட்களுக்கான வர்த்தகம் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் கோவிட் – 19 காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 827 பேர். இதுவரை 700க்கும் அதிகமானவர்கள் கோவிட் காய்ச்சலிருந்து விடுபட்டுள்ளனர். 12,000க்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இத்தாலியில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பொதுக் கூட்டங்களுக்கு தடை உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் தவிர்த்து பிற பொருட்களுக்கு வர்த்தகத் தடையை இத்தாலி அரசு விதித்துள்ளது.

இதுகுறித்து இத்தாலி பிரதமர் செப்பி கான்ட்டே கூறும்போது, “கொரோனா வைரஸ் பரவலைத் தவிர்ப்பதற்கு படிப்படியாகச் செயல்பட வேண்டும் என்பதை நாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம். அதன்படி இப்போது மற்றொரு படி முன்னேற வேண்டிய நேரம் இது.

இப்போது அனைத்து வர்த்தக நிறுவனங்களையும் (அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் தவிர்த்து) மூட உத்தரவு பிறப்பித்து வருகிறோம்.

மதுக்கடைகள், பார்கள், ஒட்டல்கள் ஆகியவற்றையும் மூட உத்தரவிட்டிருக்கிறோம். வங்கிகள், தபால் நிலையங்களும் மூடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.