வவுனியாவில் இ.போ.ச தனியார் பேரூந்து விபத்தில் 10 பேர் காயம்

வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று காலை தனியார் மற்றும் இ.போ.ச பேரூந்துடன் இடம்பெற்ற விபத்தில் 10பேர் காயமடைந்து செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை வவுனியாவிலிருந்து செட்டிகுளத்திற்கு பயணிகளை ஏற்றிச் சென்ற இ.போ.ச பேரூந்துடன் கொழும்பிலிருந்து மன்னாருக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேரூந்து நேரியகுளம் சந்தி பகுதியில் காலை 8மணியளவில் எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது.

இவ்விபத்தில் இ.போ.ச பேரூந்து வீதியை விட்டு தடம் புரண்டுள்ளதுடன் பேரூந்தில் பயணித்த சாரதி, நடத்துனர், தனியார் பேருந்தின் நடத்துனர் உட்பட 10பேர் காயமடைந்த நிலையில் செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்தில் காயமடைந்த நான்குபேர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன் வேகக்கட்டுப்பாட்டை இழந்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தனியார் பேரூந்து அதிகவேகமாக பயணித்தபோதே இவ்விபத்து இடம்பெற்றிருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் தெய்வாதினமாக எவருக்கும் உரிராபத்துக்கள் ஏற்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.