இடர் வலயங்கள் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களுக்கு இன்று காலை 6 மணிக்கு ஊரங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா இடர் வலயங்கள் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களுக்கு இன்று காலை 6 மணிக்கு ஊரங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

மீண்டும் இன்று பிற்பகல் 4 மணிக்கு மீள அமுலாக்கப்படவுள்ள குறித்த மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 6 மணிவரை நீடிக்கப்படவுள்ளது.

குறித்த மாவட்டங்களில் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 6 மணியின் பின்னர், ஊரடங்கு சட்ட அமுலாக்கம் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் முதலான கொரோனா இடர் வலயங்களில் அமுலாகியுள்ள ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல்வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதனால் ஏற்படும் கஷ்டங்களை புரிந்துணர்வுடனும் பொறுப்புடனும் பொறுத்துக்கொள்ளுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொருட்களை கொள்வனவு செய்யும்போது, அத்தியாவசிய பொருட்களுடன் மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுககு இடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில், நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக விநியோகிக்க அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலை தோட்டங்கள், ஏற்றுமதி பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.