ஆட்சியாளர்கள் சீனாவிற்கு வாய்ப்பளிப்பதால் பறிபோகும் கிழக்கு மாகாணம்

இலங்கையில் பாரிய பொருளாதார முதலீட்டு வலயங்கள் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனால் கிழக்கிலுள்ள பல ஆயிரக்கணக்கான பாரம்பரிய மீனவர்களும் விவசாயிகளும் மறைமுகமாகத் தொழிலாளியாக மாற்றப்படுவார்கள் என தேசிய மீனவ ஒத்துழைப்பு அமைப்பின் பயிற்சி இணைக்காளர் பிரான்ஸிஸ் பிரியங்கர கொஸ்ரா தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களை இந்த விடயத்தில் தெளிவுபெற வைக்க வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது விடயமாக கருத்துத் தெரிவித்த அவர், ஆட்சியாளர்கள் பெரும் பொருளாதார நலன்களை மாத்திரமே கொண்டு இயங்குவதால், மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகள் பற்றியோ, வாழ்விடப் பிரச்சினைகள் பற்றியோ அவர்கள் சிந்திக்கப் போவதில்லை எனத் தெரிவித்தார்.

2030ஆம் ஆண்டளவில் நாட்டின் வடக்கில் தொடங்கி, கிழக்கை ஊடறுத்து, தெற்கில் முடியும் பெரும் பொருளாதார முதலீட்டு வலய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுமார் 86 இலட்சம் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு, தமது வாழ்விடங்களையும் வாழ்வாதாரங்களையும் இழக்கப் போகின்றார்கள் என்ற ஆபத்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சீன நாட்டின் முழுப் பங்களிப்புடன் செய்யத் திட்டமிட்டுள்ள இந்தப் பாரிய அபிவிருத்தியின் கீழ் சீனாவிலிருந்தே தொழிலாளர்களும், வல்லுநர்களும் இறக்குமதி செய்யப்படவிருக்கின்றனர்.

இந்த பாரிய முதலீட்டு அபிவிருத்தித் திட்டத்தால் 80 சதவீதம் இலாபமடையப் போவது சீனாவும் இலங்கை அரசியல்வாதிகளுமே என அவர் மேலும் தெரிவித்தார்.